மற்ற மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அந்தந்த மாநிலத்தவர்க்கே என்ற நிலையில் - தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக்காடா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 7, 2020

மற்ற மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அந்தந்த மாநிலத்தவர்க்கே என்ற நிலையில் - தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக்காடா

மற்ற மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அந்தந்த மாநிலத்தவர்க்கே என்ற நிலையில் - தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக்காடா?


தமிழ்நாடு அரசு உறக்கம் கலையட்டும் - இல்லையெனில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து கடும் போராட்டம்!



மற்ற மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அந்தந்த மாநிலத்தவர்க்கே என்ற நிலையில், தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக் காடா? தமிழ்நாடு அரசு உறக்கம் கலையட்டும் - இல்லையெனில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து கடும் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:


தமிழ்நாடு பெயரளவில்தான் ‘தமிழ்நாடாக' இருக் கிறது இன்றைய ஆட்சியின்கீழ்; நடைமுறையில் பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், பண்பாட்டுப் படையெடுப்பை பிற இனத்தவரும், மொழியாளரும் - செம்மொழி தமிழைப் புறந்தள்ளி அதற்குரிய முக்கியத்துவத்தையும் தராது ஹிந்தி, சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பைச் செய்து வருகின்றனர்; தமிழ் நாடு அரசு இதனைக் கண்டும் காணாததுபோல் இருப்ப தோடு, கடுமையான தனது எதிர்ப்பை மத்திய அரசிடம் வைத்து, மாநில உரிமைகளைக் காப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காத ஒரு பொம்மை அரசாகவே நீடிப்பது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.


பேரபாயம் வளர்ந்துகொண்டே போகிறது!


தமிழ்நாட்டு அரசின் முக்கிய துறைகளிலும், அலுவலகங்களிலும் தமிழ்நாட்டு மக்கள், உள்ளூர் மக்கள் அறவே புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், ஆதிக்கம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகிடும் பேரபாயம் வளர்ந்துகொண்டே போகிறது!


தடுத்து நிறுத்திட தற்போதைய தமிழ்நாடு அரசு எந்த முயற்சியையும் எடுப்பதாகத் தெரியவில்லை.


நிலைமை எந்த அளவுக்கு கீழிறக்கத்திற்குச் சென்றுவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உயர்நீதிமன்றப் பிரிவில் ஒரு வழக்கை விசாரித்துள்ள நீதிபதிகளின் அமர்வே மிகுந்த வேதனையுடன் இதனை சுட்டிக் காட்டியுள்ளது.


உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி


‘‘பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலத்தவர்களை அதிக அளவில் அரசு பணிகளில் நியமிப்பது  ஏன்?'' என்ற நியாயமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர் - ஒரு வழக்கு விசாரணையின்போது.


நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் ரசாயன பிராசசிங் பணிக்கு 140 பேரை நியமிக்க 2015 இல் அறிவிப் பாணை வெளியிடப்பட்டது. இப்பணி இடங்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


இத்தேர்வில் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார்; இவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற 6 பேருக்குப் பணி நியமன உத்தரவு வழங்கியதை எதிர்த்து வழக்கைத் தொடர்ந்தார் பாதிக் கப்பட்ட சரவணன். சரவணனுக்குப் பதவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதை ரத்து செய்யும்படி, ஆயுதத் தொழிற்சாலை செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற (கிளை)த்தில் வந்தபோது, அதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் என்.கிருபாகரன், ஜஸ்டீஸ் பி.புகழேந்தி ஆகியோரின் அமர்வில் மேற்கண்ட கேள்விகளை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.


அதோடு,


‘‘மத்திய அரசு பணித் தேர்வில் அனைத்து மாநி லங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெற்று பணியமர்த்தப்படுபவர்களுக்கு அந் தந்த மாநில மொழி தெரிந்திருக்கவேண்டும். பிற மாநிலங்களில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.


வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று,  பணி நியமனம் பெறுவது எப்படி? அரசின் கொள்கை முடிவு என்று ஏமாற்றுகிறார்கள்.


பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படை யாகவும் நடைபெறவேண்டும். ரயில்வே தேர்வில் அதிக அளவு மோசடி நடைபெறுகிறது.


தமிழகத்தில் மின் வாரியம், ரயில்வே என பல்வேறு துறைகளில் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்'' என்று ஆணி அடித்ததுபோல, தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளதோடு, மற்றொரு கேள்வியையும் விசாரணையின்போது எழுப்பியுள்ளனர்!


தமிழகத்திற்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?


‘‘தமிழகத்திற்கு என்ன பிச்சை போடுகிறீர்களா? ஆயுதத் தொழிற்சாலை பணிக்கான எழுத்துத் தேர்வின் விடைத்தாள் 3 நாளில் அழிக்கப்பட்டது ஏன்?


பணி நியமனம் எந்த அடிப்படையில் மேற்கொள் ளப்பட்டது என்பது தொடர்பாக ஆயுதத் தொழிற்சாலை பொது மேலாளர் பதில் தர வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.


- ஒரு மாநில அரசு கடமை தவறியது (Dereliction of Duty) என்பதை எவ்வளவு நாசுக்காக உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழ்நாட்டு ஆட்சி தமிழ் மக்கள் உரிமைகளை பலி பீடத்தில் வைப்பதை இனியாவது- காலந்தாழ்ந்த நிலையிலாவது உடனடியாக ‘‘விழித்துக்கொண்டு'' ஆவண செய்ய முன்வரட்டும்.


கருநாடக (பி.ஜே.பி.) அரசில், ‘‘80 சதவிகித பணிகள் உள்ளூர்வாசிகளுக்கே!'' (கன்னடியர்களுக்கே) என்று சட்டமும் இயற்றி பிரகடனப்படுத்தியுள்ளது.


தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்


அதுபோல, மத்திய பிரதேச (பா.ஜ.க.) அரசும் தனிச் சட்டமே இயற்றப் போகிறோம் என்று கூறு கிறது. ஏற்கெனவே சிவசேனை மராத்திய அரசு நடைமுறையில் அதனை செய்துவரும் நிலையில், தமிழ்நாடு இப்படி நாதியில்லாத ஒரு மாநிலமாக, நம் பிள்ளைகள், இளைஞர்கள் வேலை கிட்டாமல் தற்கொலை செய்துகொண்டு மாளும் நிலையில், இப்படி பிற மாநிலத்தவரின் பகற்கொள்ளையா? இதற் கொரு முற்றுப்புள்ளி சட்ட ரீதியாகத் தமிழ்நாடு அரசு வைக்கவேண்டும்.


தமிழ்நாடு அரசின் உறக்கம் கலையட்டும்


இதனை வலியுறுத்தி திராவிடர்கழகம் நாடு தழுவிய அறப்போரை, ஒத்தக் கருத்துள்ளவர்களையும், இளைஞர்களையும் திரட்டி நடத்திடவும் தயங்காது!


தமிழ்நாடு அரசின் உறக்கம் கலையட்டும் -


சமூகநீதிக் கொடியை இறக்க விடமாட்டோம்!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


7.10.2020


No comments:

Post a Comment