நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஒன்றிய அரசு தேர்வு முகமைக்கு தாக்கீது உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஒன்றிய அரசு தேர்வு முகமைக்கு தாக்கீது உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 15- மருத்துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்வியில் பெற்ற மதிப்பெண்களின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், நீட் நுழை வுத்தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்டங்களை மாநில அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்றுத் தருமாறு ஆளுநர்மூலம் அனுப்பிவைக்கப்பட்டும் ஒன்றிய அரசு இன்னமும் கிடப்பில் போட்டு வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வின் முறைகேடுகள் அவ்வப்போது வெளிச் சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான கடந்த 4.6.2024 அன்று 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப் பட்டுள்ளன. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மய்யத்திலிருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண் களை பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இதனை கண்டித்து மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனி டையே ‘நீட்’ முறைகேடு விவகாரத்தில் சி.பி.அய். விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று (14.6.2024) விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசுக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசு தரப்பில் அடுத்த விசாரணையின்போது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இந்த மனுக்களை, ஏற்கெனவே ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட ‘நீட்’ முறைகேடு விவ காரம் தொடர்பான மனுக்களோடு இணைக்க வும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment