தவறான முடிவுகளால் உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த இடம் பூஜ்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

தவறான முடிவுகளால் உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த இடம் பூஜ்யம்

featured image

லக்னோ. ஜூன் 6– நாடாளுமன்ற தேர்தலில் ஓர் இடத்தை கூட பிடிக்கா மல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை பலமுறை ஆட்சி செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலத் தின் அசைக்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மாயாவதி.

தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் மற்றும் உயர்ஜாதி இந்துக்களின் ஆதரவை பெற்றிருந்த மாயா வதி, தேசிய அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியவர்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கணிசமான இடங்களை பெற்று வந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில்கூட தனது நேர் எதிர்க்கட்சியான சமாஜ்வாடியுடன் ஆச்சரியக் கூட்டணியை கட்டமைத்தார்.

இது பின்னாளில் உடைந்தாலும், அந்த தேர்த லில் தான் போட்டியிட்ட 38 இடங்களில் 10இல் வெற்றி பெற்றார். மாநி லத்தில் 2ஆவது பெரிய கட்சியாகவும் பகுஜன் சமாஜ் உருவெடுத்தது.

தனித்துப் போட்டி:

ஆனால் சமீப காலமாக மாயாவதியின் அரசியல் செயல்பாடுகள் கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.

இந்த தேர்தலில் அவர் எடுத்த முடிவுகளும் கட்சியினரிடம் விரக்தியை ஏற்படுத்தின.

குறிப்பாக எந்த கட்சி யுடனும் கூட்டணி சேராமல் போட்டியிட்டது, பல்வேறு முக்கியமான பிரச்சினைகளில் பா.ஜனதா வுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தது போன்ற முடிவுக ளால் பா.ஜனதாவின் ‘பி டீம்’ என்றே கூறப்படும் நிலைக்கு பகுஜன் சமாஜ் தள்ளப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இதன் தொடர்ச்சியாக இந்த தேர்தலுக்கு முன்பு அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளில் அய்க்கியமாகினர். அதில் சிலர் இந்த தேர்தலில் போட்டியிடவும் செய்தனர்.

சிதறிய தாழ்த்தப்பட்டோர் வாக்குகள்:

இவ்வாறு தேர்தலுக்கு முன்பே கலகலத்துப்போன பகுஜன் சமாஜ் கட்சி, பிரசாரக் களத்திலும் அதிக ஆர்வம் காட்டவில்லை.

அதேநேரம் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படும் தாழ்த்தப்பட்டோர் வாக்காளர்களை கவர்வ தற்காக பா.ஜனதாவும், சமாஜ்வாடியும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.

 

குறிப்பாக மாநிலத்தின் தாழ்த்தப்பட்டோர் முகங்களாக அறியப்படும் பேபி ராணி மவுரியாவை பா.ஜனதாவும், சந்திரசேகர் ஆசாத்தை சமாஜ்வாடியும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டன. இதனால் தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் சிதறின.

இந்த காரணிகளால் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி முற்றிலும் துடைத்து எறியப்பட்டு விட்டது. மாயாவதி வெற்றிக்கணக்கைத் தொடங்க முடியாமல் காணாமல் போய் விட்டார். இது பகுஜன் சமாஜ் தொண்டர்களிடம் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment