தமிழ்நாட்டில் அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

தமிழ்நாட்டில் அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்

featured image

திருவள்ளூர். ஜூன் 6- திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், தமிழ் நாடு அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருவள்ளூர் (தனி) தொகுதியில், சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்), கு.நல்லதம்பி (தேமுதிக), பொன்.வி.பால கணபதி (பாஜக), மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி), து.தமிழ்மதி (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட14 பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் இருந்து வந்தார். முடிவில், 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவர், பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் தமிழ்நாடு அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வெற்றியை பெற்ற சசிகாந்த் செந்தில் வாக்கு எண்ணிக்கை மய்யத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு வெளியே வந்த போது, அவரை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி தொண்டர்கள் தோளில், சுமந்து, இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

எதிர்த்து போட்டியிட்ட 13 பேரும் வைப்புத் தொகையை இழந்தனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 14,30,738 (68.59 சதவீதம்) வாக்குகள் பதிவாகின. இதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரில், பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று 2ஆம் இடமும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, 2,23,904 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஜெகதீஷ்சந்தர் 1,20,838 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பெற்றனர்.

2ஆம் இடம் பிடித்த பாஜக வேட்பாளர் உட்பட சசிகாந்த் செந்திலை எதிர்த்துப் போட்டியிட்ட 13 பேரும், பதிவான வாக்குகளில் 6இல் ஒரு பங்கு வாக்குகளை பெறாததால், வைப்புத் தொகையை இழந்தனர்.

அய்.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர்

சசிகாந்த் செந்தில் கருநாடக கேடர் அய்.ஏ.எஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கருநாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். இது தவிர பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2019 செப்டம்பரில் தனது பணியிலிருந்து விலகிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

சசிகாந்த் செந்தில். கட்சியின் கட்டளையை ஏற்று கருநாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்தார். அதை திறம்பட செய்து முடிக்கவும் செய்தார்.மேலும் கருநாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் என பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் தனது குரலை சமூக வலைதளங்களில் அழுத்தமாக பதிவு செய்தார்.

அவை அனைத்துமே பரவலாக கவனம் பெற்றன. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment