40-க்கு 40: தி.மு.க. கூட்டணி வெற்றியால் பா.ஜ.க.வில் குழு மோதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

40-க்கு 40: தி.மு.க. கூட்டணி வெற்றியால் பா.ஜ.க.வில் குழு மோதல்

முன்னாளா? இந்நாளா? யார் தலைவர்?

சென்னை, ஜூன் 8- பெரும்பாலான தொகுதிகளில் வைப்புத்தொகை காலி, தொடர் தோல்வியால் பாஜகவில் மோதல் வெடித்து உள்ளது.

கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்தித்தது தொடர்பாக அண்ணாமலைக்கும், தமிழி சைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் சமூக ஊடக அணிக்கு தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலை மை யிலான கூட்டணி 40 தொகுதி களையும் கைப்பற்றியது. அதிமுக, பாஜக கூட்டணிகள் 40 தொகுதிகளிலும் படுதோல்வியை அடைந்தன. பாஜக கூட்டணி 21 இடங்களில் வைப்புத் தொகையை இழந்தது. பல இடங்களில் பாஜக 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தைப் பிடித்து உள்ளது.

“தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவரை நல்லவர் எனக்கூறி அவருடன் கைகோர்த்த ஓபிஎஸ்சுக்கு எந்த அருகதையும் இல்லை.

அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக, நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக பொய் கூறுகிறார். அவர்கள் தொகுதியில் விசாரித்தால் எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்பது தெரியும்” என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியும் கடுமையாகப் பேட்டி கொடுத்துள்ளார்.

தமிழிசை – அண்ணாமலை மோதல்

பாஜகவிலும் மேனாள் தலைவரான தமிழிசைக்கும், அண்ணாமலைக்கும் பயங்கர மோதல் வெடித்து உள்ளது. பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அந்தக் கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது என்பது தான் உண்மை. இப்போது தேர்தல் அரசியலிலும் அண்ணாமலை கடுமையான தோல்வியைச் சந்தித்து உள்ளார்.

அவர் தலைவராக பொறுப்பேற்ற தில் இருந்தே பல பொய்களை நா கூசாமல் பொது மேடைகளில் பேசி வந்தார். இதை பாஜகவினர் கூட ரசிக்கவில்லை. அண்ணாமலையின் பேச்சுக்கள் மிக மோசமானதாக இருந்ததால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவையே கொடுத்துள்ளன. அதுமட்டுமல்ல, தன்னை புகழ்வதற்காகவே இணையத்தில் ஒரு ‘வார் ரூமே’ இயங்கச் செய்ததாகவும் தகவல் வெளியானது. தன்னை எதிர்த்த மூத்த நிர்வாகிகள் பலரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளிலும் தீவிரமாகச் செயல்பட்டதாக அண்ணாமலை மீது விமர்சனங்கள் எழுந்தன.

அண்ணாமலையின் ஆசியுடன் சொந்தக்கட்சியினரின் பல “ஆடியோ, வீடியோ” வெளியான விவகாரத்தில் காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா உள்ளிட்ட பலர் வெளியேறினர். பலர் ஓரங்கட்டப்பட்டனர். இப்படியாக அண்ணாமலையின் மோசமான நடவடிக்கைகள் தமிழ்நாடு பாஜகவுக்குள் புயலாக வீசி, பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற எதிர்பார்த்திருந்த நிலையில், அண்ணாமலைக்கு செக் வைக்கும் வகையில் தற்போது, ஆளு நர் பதவியிலிருந்து விலகி விட்டு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை களம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் சரியாக வேலை பார்க்காத மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மீது பாஜக தலைமை காட்டமாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது பாஜக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையைத் தூக்குவதற்கும் திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள தமிழிசை தரப்பு தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது. இதற்கு, அண்ணாமலையால் ஓரங்கப் பட்ட மூத்த நிர்வாகிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனராம்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலை யில், அதிமுக மேனாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 6.6.2024 அன்று அளித்த பேட்டியின் போது, ‘அதிமுக-பாஜக கூட்டணி கலை வதற்கு அண்ணாமலை தான் காரணம், அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜக- அதிமுக உடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று கூறினார். இதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளிக்கையில், ”அதிமுகவில் எடப்பாடி-வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்காது” என்றார். அதிமுகவுக்கும், அண்ணா மலைக்கும் இடையே மீண்டும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணா மலை அதிமுக உடன் மோதுவதை தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

போட்டியிட பா.ஜ.க.வில் ஆளில்லாமல் இருந்த சூழலில் ஆளுநராக இருந்த மேனாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை இழுத்து வந்து போட்டியிட வைத்தது பா.ஜ.க. தலைமை. இப்போது பழைய தலைவருக்கும் நடப்புத் தலைவருக்கும் மோதல் முற்றியுள்ளது என்று தெரிகிறது.

No comments:

Post a Comment