மோடி ‘‘கடவுளின் பிள்ளையாம்''-நல்ல நகைச்சுவை! - திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

மோடி ‘‘கடவுளின் பிள்ளையாம்''-நல்ல நகைச்சுவை! - திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்

 

சென்னை, மே 26 மோடி தான் கடவுளால் நேரடியாக பூமிக்கு அனுப்பப்பட்ட பிள்ளை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரைக் கலைஞரும், சிந்தனைவாதியுமான நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று (25.5.2024) நடந்தது. அந்த விழாவில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு ‘‘அம்பேத்கர் சுடர்” விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பின்பு பேசிய அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
கலைஞன் கோழையாகக் கூடாது!
விருது விழாவில் பேசிய அவர், “உடம்புக்கு காயமானால் நாம் சும்மா இருந்தாலும் அது ஆறிடும். ஆனால், ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால், அது அதிகமாகிவிடும். இன்றைக்கு இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்றால், அதற்கு மக்கள்தான் காரணம். அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை என்கிறபோது, ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும். என்றும் மக்களின் குரலாக இருப்பேன்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த மன்னரை நான் எதிர்த்துக் கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் ‘தெய்வக்குழந்தை’ ஆகிவிட்டார். இனிமேல் நாம் அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. ‘‘தெய்வம் சோதிக்கிறது” என்றுதான் சொல்லமுடியும். மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்ததல்ல. அவமானத்தில் பிறந்தவை.
மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்; மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள். மக்களின் உணர்வு தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும்? அவர் ‘தெய்வ மகன்’ என்பது நகைச்சுவையே!
இயற்கையே அனுமதிக்காது
தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. இந்த 10 ஆண்டுகாலமாக அவர் பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறார் அல்லவா! ‘‘நான் ஆர்எ.ஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை அடைகிறேன்” என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெறும் போது சொல்கிறார். அப்படியென்றால், அந்த நபர் நீதிபதியாக இருக்கும்போது எத்தகைய தீர்ப்புகளை கொடுத்திருப்பார் என்று நமக்கு தெரியாதா! இது ஒரு நிரந்தரமான போராட்டம். ஹிட்லர் மாதிரி ஆட்களில் இருந்து வந்தவர்தான் இவரும். ஆனால், இந்த மாதிரி ஆட்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால், இதுபோன்ற ஆட்களை இயற்கையே ஜீரணிக்காது. வெளியே துப்பி விடும்.
மீண்டும் மீண்டும் இவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், போகும்போது கிடைக்கும் பாடங்கள் இருக்கிறது அல்லவா, அதுதான் அதுபோன்ற ஆட்கள் மீண்டும் வருவதற்கு நீண்டகாலத்தை உருவாக்கும். ஆனால், அவர்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் பேசினார்.

No comments:

Post a Comment