பிரதமர் மோடியின் நேர் காணல்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 28, 2024

பிரதமர் மோடியின் நேர் காணல்கள்!

நாடாளுமன்ற தேர்தல் மும்முரமாக நடந்து வரும் சூழலில், கடந்த மார்ச் 31 முதல் மே 14 வரை, 41 நேர் காணல்களை தந்துள்ளார் மோடி.
ஆனால், 41 நேர்காணல்களிலும், இடம்பெற்றிருப்பது, நாட்டை முன்னேற்றி செல்கிற கருத்துகளோ, மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களிலிருந்து மீட்டெடுக்கும் திட் டங்களோ இல்லை.
மாறாக, பிரச்சார மேடைகளில் பேசுவது போன்ற மோடியின் பொய்களும், சில பல நாடகங்களும் மட்டுமே நேர்காணல்களின் உட்கருத்தாய் அமைந்துள்ளன.

ஆக்‌ஷன் என்றதும், கண்ணீர் விடுவதும், ‘இஸ்லா மியர்களை பிரித்துப் பேசினால், நான் பொது வாழ்வில் இருக்கவே தகுதியவற்றவன்’ என்ற வாய்க்கூசாத பொய்களுமே அதிகளவில் காணப்படுகின்றன.
கேள்வியும் நானே, பதிலும் நானே : மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணல்கள், வெற்றுப் பேச்சுகளே!
இதனை சகித்துக்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே, நேர்காணல் தந்து வருகிறார் மோடி.
காரணம், அவர்கள் தான் உண்மையை சரிபார்த்து முறையிடமாட்டார்கள். மோடியின் நாடகங்களை கலைக்கும் வகையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க மாட்டார்கள்.

கேள்விகளுக்கு விடை கிடைக்கா விட்டாலும், கேள்விக்குச் சற்றும் தொடர்பில்லாத விடையை மோடி தந்தாலும், கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே! அதில் வெகு சிலர் மட்டுமே, மணிப்பூர் கலவரம், தேர்தல் பத்திரம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக் குறித்து கேள்வி எழுப்பினர். ஆயிரக்கணக்கான பெண் களுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த, பா.ஜ.க கூட்டணி மக்களவை வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து, மூன்றே நேர்காணலில் தான் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல தேசிய சிக்கல்களுக்கு எதிராக கேள்விகளே எழுப்பப்படவில்லை.

எனினும், கேட்கப்பட்ட கேள்விகளுக்காவது சரியான விடை கொடுத்தாரா மோடி என்றால், அதுவும் இல்லை.
கேட்டது ஒன்று – கிடைத்தது மற்றொன்று என்பது போல, தனக்கேற்ற வகையில், வழக்கம் போல இல்லாத பல சிக்கல்களைப் பேசி, அதற்குக் காங்கிரஸ் தான் காரணம் என்று பழிசூட்டும் வேலையை மட்டும்தான் செய்தார் மோடி.
இதற்கு நேர்காணல் செய்த பத்திரிகையாளர்களும், இடைமறித்து, மோடியின் பேச்சை உண்மையுடன் ஒப்பிட்டு வினாக்களை எழுப்பவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டாலும், அது குறித்து கவலை கொள்ளாமல், மோடி கூறுவது தான் விடை, மோடி பேசுவது தான் உண்மை என்பது போல – தாங்கள் நேர் காணல் செய்பவர்கள் என்பதை மறந்து பார்வையாளர் களாக தங்களை தகவமைத்துக் கொண்டனர்.
இதனால், மணிக்கணக்கில் பதிவான மோடியின் காணொலிகள், பொய்களால் மட்டுமே நிரம்பியிருந்த தால், அதனைக் காணவும் மக்கள் ஈடுபாடு கொள்ள வில்லை.

இதன் வழி, மோடியின் சராசரி பார்வையாளர்களும், தற்போது வெகுவாக குறையத் தொடங்கியுள்ளனர்.
அதே சூழலில், சுமார் 41 நேர்காணல்களைத் தர நேரம் இருக்கிற மோடிக்கு, ராகுல் காந்தியிடம் விவாதிக்க நேரமில்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சலிக்காமல் பேசப்படும் பொய்கள் அம்பலப்பட்டு விடும் என்ற பயம் தான் காரணமா? என்ற கேள்வியும் மறுபக்கம் வலுக்கத்தொடங்கியுள்ளது.

மோடியின் நாடகப் பாணி பேச்சும் எடுபடவில்லை. மாய்மாலங்களும் எடுபடவில்லை என்பதுதான் நிகர உண்மை! செய்தியாளர்களை சந்திப்பதை அறவே தவிர்த்து வந்த பிரதமர் மோடி – தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்தித்துள்ளார். அவர் ஏன் சந்திக்கத் தயங்கினார் என்பது இப்பொழுது புரிந்து விட்டது.
சி.என்.என். தொலைக்காட்சி சார்பில் பிரபல ஊடகவிய லாளரான கரண்தாப்பருடன் பேட்டியில் அமர்ந்த அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நான்கரை நிமிடங்கள் தான் தாக்குப் பிடிக்க முடிந்தது. கரண்தாப்பரின் கேள்விக் கணைகளின் சுணையின் வலியைத் தாங்க முடியாமல் பேட்டியை இடையில் முறித்துக் கொண்டு கம்பி நீட்டினார் என்பது தனிக் கதை!
மேடையில் நாடக பாணியில் முழங்கலாம் – யாரும் கேட்கப் போவதில்லை; ஆனால் நேர்காணல் என்பது ஒண்டிக்கு ஒண்டியாயிற்றே! மோடி தாங்குவாரா? அதுதான் நடந்தது. ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மோடி வேறு! உண்மையான மோடி வேறு!!

No comments:

Post a Comment