ஆர்.எஸ்.எஸ். சமூக நீதியை ஆதரிக்கும் அமைப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

ஆர்.எஸ்.எஸ். சமூக நீதியை ஆதரிக்கும் அமைப்பா?

featured image

14.5.2024 ‘தினமணி’யில் வினய் சஹஸ்ர புத்தே என்பவரால் எழுதப்பட்ட நடுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு “சமுதாய நல்லிணக்கமும், ஆர்.எஸ்.எஸும்” என்பதாகும்.

(1) ஆர்.எஸ்.எஸில் ஜாதிக்கு இடமில்லை என்பது ஒரு அம்சம். இதற்கு பதிலடி கொடுத்து 24.5.2024 நாளிட்ட விடுதலையில், ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸின் சமூக நீதியைத் தூக்கிப் பிடிக்கும் இரண்டாவது அம்சத்திற்கான பதிலடியே இக்கட்டுரை.
பி.ஜே.பி.யின் தேசிய தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட சி.பி.தாகூர் பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார்?

“இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்ற நிலையில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வாக்குகளை வாங்குவதற்காக இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.” என்று பேசவில்லையா? ((IMB Live, 28.4.2014))

ராம் விலாஸ் பஸ்வான் இதனைக் கடுமையாக எதிர்க்கவில்லையா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘பஞ்சான்யா’விற்கு அளித்த பேட்டி என்ன சொல்லுகிறது?

“இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் சரிசமமாக வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும்போது தான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால் இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடு ஆகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்ற பெயரில் கலாச்சார காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் செயல்படுவது பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்.எஸ்.எஸ். இதழுக்குப் பேட்டி அளித்ததற்கு என்ன பொருள் ‘தினமணி’யாரே?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அதோடு நிற்கவில்லை. ஒருபடி மேலே சென்று பேட்டி அளித்தார்.

“இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரின் பார்வைகளும் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார்கள். ஆகவே அரசு வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலுடன் இருக்கும் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபடும்போது தான் இதுபோன்ற இடஒதுக்கீட்டு தேவைக்கான போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை இடஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைப்பது அத்தியா வசியமான ஒன்றாகும்” என்று பேட்டி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைவர்தானே!

உண்மை இவ்வாறு இருக்க, ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீட்டுக்கு, சமூகநீதிக்கு எதிரானது அல்ல ‘தினமணி’, நடுங்காமல் எழுதுகிறது. முழுப் பூசணிக்காயை சுண்டு விரலால் மறைக்கப் பார்க்கும் அவாளின் சூட்சுமம் புரிகிறதா இல்லையா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்.எஸ்.எஸ் இதழான ‘பஞ்சான்யா’ இதழுக்கு அளித்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான இந்தப் பேட்டியை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உடனடியாக ‘விடுதலை’யில் (22.9.2005) அறிக்கை விட்டதையும் ‘தினமணி’யின் நடுப்பக்க எழுத்தாளருக்குத் தெரிவித்துக் கொள் கிறோம்.

தினமணி’களுக்கு இது ஒன்றும் புதிதல்ல! அண்ணல் அம்பேத்கரே இடஒதுக்கீடுக்கு எதிரானவர் என்று தலையங்கம் தீட்டியதுண்டே! தலையங்கத்தின் தலைப்பு “மவுனப் போராட்டம்”.

அம்பேத்கர் கூறியதாக ‘தினமணி’ தன் தலையங்கத்தில் குறிப்பிட்டது என்ன?

“இந்தியா விடுதலை அடைந்தபோது பட்டியல் இன மக்களுக்கு நூற்றாண்டுகளாய் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரமாக, தற்காலிக ஏற்பாடாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் காலாகாலம் எங்கள் சமூகத்தை ஊன்றுகோலில் நிற்க வைத்துவிடும் இடஒதுக்கீடு தேவையில்லை என்று அதை எதிர்த்தார். ஆனால் பண்டித நேருவும், சர்தார் படேலும் வற்புறுத்தியதற்கிணங்கதான் பத்து ஆண்டு கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பட்டிலினத்தவருக்கான இடஒதுக்கீட்டை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டார்” என்று தினமணியின் தலையங்கம் அப்பட்டமாக உண்மைக்கு மாறான தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

‘தினமணி’யின் இந்தத் தலையங்கத்துக்குப் பதிலடியாக உடனே ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியதே! தலையங்கத்தின் தலைப்பு: ‘தினமணி’யின் அண்டப்புளுகு – ஆகாசப் புளுகு’ (விடுதலை, 4.10.2016). தலையங்கத்தின் முக்கிய பகுதி இதோ:

“நேரு தலைமையில் அரசியல் சட்ட வடிவமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது (27.2.1947) இடஒதுக்கீடு குறித்து அம்பேத்கர் கூறியதாவது, “இந்திய சமூகத்திலும், பொருளா தாரத்திலும் இன்றுவரை சமூகநீதி கிடைக்கவில்லை, இங்கு மக்களிடையே ஜாதியின் காரணமாக வேறுபாடுகள் மிகவும் அதிகமாக உள்ளன. இந்த வேறுபாடுகளைக் களையாவிட்டால், மக்களாட்சியில் அதிகார வர்க்கத்தினரின் மூலம் பெரும் ஆபத்து ஏற்பட்டு விடும், இங்கு பிறர்மீது சகோதரத்துவத்துடன் பழகும் மனப்பான்மை மிகவும் அரிதாக உள்ளது. சமூக நீதியின் மூலம் சமத்துவமான இந்திய சமூகத்தை உருவாக்க முடியும். இடஒதுக்கீட்டின் மூலமே சமூக நீதியை எட்ட முடியும். இல்லாவிட்டால் இடஒதுக்கீடு இல்லையென்றால் சமூக நீதியை எட்டுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்துவிடும். இடஒதுக்கீடு மட்டுமே இதற்கான ஒரே வழி. வேறு மாற்று வழிகள் இந்திய சமூகத்தில் இன்றைய சூழலில் பயனற்றவையாக அமைந்துவிடும் (பயனற்றவை என்பது குறித்து கூறும் போது தலித்துகளுக்குத் தனிக்குளம் போன்ற ஒரு தீர்வை காந்தியார் கூறியதை மேற்கோள் காட்டினார்).
தினமணிக்கு அப்போதே மறுத்து எழுதப்பட்ட விடுதலை தலையங்கத்தின் பகுதி இது!

ஆர்.எஸ்.எஸ். இடஒதுக்கீடுக்கு எதிரானதல்ல என்று கூறுகிறதே – ஆர்.எஸ்.எஸைத் தாயாகக் கொண்ட ஜனசங்கத்தின் கொள்கை அறிக்கை என்ன கூறுகிறது?
“அரசியல் சட்டத்தின் எல்லாக் குடிமக்களுக்கும் சட்ட உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் சில இடங்களில் ஜாதி, மாநில மொழி அடிப்படையில் விசேஷ சலுகைகள் கேட்கிறார்கள். பிற்படுத்தப் பட்டோர் என்ற போர்வையில் கோரப்படும் இந்த சுயநலக் கொள்கைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் – ஜனசங்கம் அதற்கொரு முடிவு கட்டும்” இதுதான் ஆர்எஸ்.எஸின் அரசியல் வடிவமான ஜனசங்கத்தின் கொள்கை அறிக்கை.

மண்டல் குழுப் பரிந்துரையில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வேலைவாய்ப்பில் சமூக நீதிக் காவலர் மாண்புமிகு பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த நிலையில் – பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். – எப்படி எல்லாம் நடந்து கொண்டன?

வி.பி.சிங். 27 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்த வுடன் அயோத்தியில் இராமன் கோயில் கட்ட ரதயாத்திரை புறப்பட்டார் – அன்றைய பா.ஜ.க தலைவர் அத்வானி. அதற்கு முன்னோடும் பிள்ளை யாக இருந்தவர்தான் மோடி என்பது நினை விருக்கட்டும். அதற்குப் பிறகு அத்வானியை அஸ்தமனம் செய்தவர்தான் மோடி!
பல இடங்களில் கலவரம் வெடித்தது. ஆர்.எஸ்.எஸ்.தானே முன்னின்று நடத்தியது. ஹிந்து மதவெறியை ஊதி விட்டது. பீகார் மாநிலத்துக்குள் இந்த யாத்திரை நுழைய அன்றைய முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் அனுமதிக்க வில்லை. லல்லு பிரசாத். வி.பி.சிங் அணியில் இருந்தார். உடனே வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெற்று, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க வழி வகுத்தது. இவர்கள்தான் மண்டல் பரிந்துரையை ஆதரித்ததாக வெட்கப்படாமல் பொய் பேசுகிறார்கள். வி.பி.சிங் மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதால்தான் இராமன் கோயில் கட்டும் பிரச்சினையை உடனே கையில் எடுத்ததாக அத்வானியே ஒப்புக் கொண்டிருக் கிறார். அத்வானி அப்போது தந்த பேட்டி இது.

27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வி.பி.சிங் ஆட்சியை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் கலவரம் செய்தனர். இராஜீவ் கோஸ்வாமி என்ற உயர்ஜாதி மாணவர் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார் (இது திட்டமிட்டு நடந்த எரிப்பு என்ற குற்றச் சாட்டும் எழுந்தது). 55 சதவிகித தீப்புண் காயத்துடன் புதுடில்லி சப்தர்ஜங் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அந்த நிலையில் அத்வானி, “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி அத்வானியின் இடஒதுக்கீடு எதிர்ப்பை அப்படியே வெளிச்சப்படுத்துகிறது.   இதோ,

அந்தப் பேட்டி:

“புதுடில்லியில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தீக்குளித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மாணவர்களின் பெற்றோர்கள் என்னை. வீடு தேடி வந்து சந்திக்கிறார்கள். இன்னும் ஏன் இந்த ஆட்சிக்கு ஆதரவு தருகிறீர்கள்? ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று வற்புறுத்தி வருகிறார்கள். மண்டல் பிரச்சினையைக் காரணம் காட்டி. ஆதரவைத் திரும்பப் பெற்றால், அது அரசுக்கு பெரும் பயனைத் தேடிக் கொடுத்து விடும் என்றே நான் உணர்ந்தேன்.” என்னைத் தேடி வந்த பெற்றோர்களிடம் நான் கூறினேன்:

“நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த அரசு இட ஒதுக்கீடு பிரச்சினையில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது என்பது உண்மை தான். உரிய நேரத்தில் – நாங்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்போம்.” என்றாரே எல்.கே.அத்வானி.

(New Delhi, where the self immolation had taken place, parents used to come to my place daily. “Why are you supporting the government? Withdraw your support.” I felt that withdrawing our support on the issue of Mandal would be of an enormous benefit to the government. I said ‘I agree with you that the government is behaving very badly but we will take action at the appropriate time. – Advani – Hindustan Times, 21 Sep. 1990)

சொன்னபடியே வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த் தார்களா இல்லையா?

தன் ஆட்சி மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணிவோடு எதிர்கொண்டார் வி.பி.சிங் அவரே நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் பேசினார்.

27 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்? இதை இந்த வாக்கெடுப்பு வழியாக மக்கள் அறிந்து கொள்ளட்டும். என்னுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டாலும், நான் அமர்ந்திருந்த பிரதமர் இருக்கையில் யார் வந்து அமர்ந்தாலும் 27 சதவிகித “இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு, இந்த நாற்காலியில் ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது” என்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் கம்பீரமாக முழக்கமிட்டார்.

வி.பி.சிங் அறிவிப்பை ஆவேசமாக எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ். இந்த தேசத்தைப் பிளவுபடுத்துகிறார் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். அதன் அதிகாரபூர்வ ஏடான ”ஆர்கனைசர்’ இதழில் முதல் பக்கத்தில் ‘ராஜாவின் (வி.பி.சிங்கின்) ஜாதி யுத்தம்’ என்ற தலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியது;

150 ஆண்டுகால அந்நிய ஆட்சியான பிரிட்டீஷ் ஆட்சி சாதிக்க முடியாத ஒன்றை ஒரே ஆண்டில் சாதித்துக் காட்டுவேன் என்று வி.பி.சிங் மிரட்டுகிறார். இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்த விவேகானந்தரும், தயானந்த சரசுவதியும். மகாத்மா காந்தியும் டாக்டர் ஹெட்கேவரும் மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளை வி.பி.சிங் சிதைக்கத் துடிக்கிறார்.சமூகத்தை மண்டல் மயமாக்கி, வி.பி.சிங் சாதிக்க விரும்புவதெல்லாம் இந்து சமூகத்தை. முன்னேறியவர்கள். பிற்படுத்தப்பட்டோர், அரிஜன் என்பதாகக் கூறுபோட வேண்டும் என்பது தான் என்று ‘ஆர்கனைசர்’ ஏடு எழுதியது.

(V.P. Singh threatens to achieve in one year what the British could not do in these 150 year long alien rule….. He wants to undo the great task of uniting Hindu society from the days of Vivekananda, Dayananda Saraswathi, Mahathma Gandhi and Dr. Hedgewar…. what V.P.Singh through Mandalisation of the society intends to achieve is a division of Hindus on forward, backward and Harihjan lives… (‘Organiser’ 26, Aug. 1990. Page 1)

வி.பி.சிங் மண்டல்குழு பரிந்துரையை செயல்படுத்தி யதற்காக பா.ஜ.க அவரது ஆட்சியைக் கவிழ்க்க வில்லை என்று குரலை மாற்றிப் பேசுகிறார்களே, அவர்களின் உண்மை நிலை இதுதான்!

மக்களை பிறப்பின் அடிப்படையில் வருணா சிரமத்தைப் புகுத்தி பல்லாயிர ஜாதிகளாகக் கூறு போட்டவர்கள் அவர்கள். ஜாதியால் பிளவுப்படுத்தப் பட்டு, கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் வாய்ப்பினை அளித்தால், அப்படி அளிப்பது சமூகத்தைப் பிளவு படுத்துவதாம்! எப்படி இருக்கிறது? நம் காலத்தில் நம் கண் எதிரேயே நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சமூக அநீதி சக்திகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட சமூகநீதிக்கு ஆதர வாளர்கள் என்று கதை புனையும் – ஆர்.எஸ்.எஸ். – அதை ஆதரிக்கும் தினமணி போன்ற ஊடகங்களை எளிதாக இவற்றின் மூலம் அடையாளம் காணலாம் அல்லவா?

No comments:

Post a Comment