ஜூன் 4ஆம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

ஜூன் 4ஆம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மே 27- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்குங்கள் என்றும், ஜூன் நான்காம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் என்றும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மடல்” என்ற தலைப் பில் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நம் இதயத் துடிப்பாகவும், குருதி ஓட்ட மாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன் னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டு மல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே முத் தமிழறிஞர் கலைஞரைப் போன்ற பொதுவாழ் வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது.
இந்திய வரைபடத்தில் தேட வேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக்களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.
முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே.
5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன் னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர் களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நம் முத் தமிழறிஞர் கலைஞர்தான். அவர் நம்மை நாள் தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவ ரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். நமது தி.மு.க. கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.
‘திராவிடல் மாடல்’ அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். தி.மு. கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றைப் பதியச் செய்திட வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை

அறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊர்கள் தோறும் வளர்த்தெடுத்தவர் தலைவர் கலைஞர். அண் ணாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.கழகத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்து வலி மைப் படுத்தியவரும் தலைவர் கலைஞர்தான். அவருடைய நூற்றாண்டில் தி.மு.கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல் திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 கோடி பேர்

தன்னால் கழகத்திற்கு என்ன நன்மை என்று நினைப்பவர்கள்தான் தி.மு.கழகத்தின் ரத்த நாளங்கள் என்றவர் கலைஞர். அத்தகைய ரத்த நாளங்களாக தி.மு.கழகத்தின் அனைத்து நிர் வாகிகளும் செயலாற்றி, ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, தி.மு.கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை
2 கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் நாம் மேற் கொண்டுள்ள அரிய பணியாகும்.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.
மாநில சுயாட்சி
இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதெல்லாம் வடஇந்தியத் தலைவர் களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் செயலாற்றி யதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப் பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்ட தையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர்.
தி.மு.க. என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய் மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல் களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர்.

வன்மம்

அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.
வன்மத்தைக்கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப் போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.
ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் தி.மு.கழகம் சார்பிலும், ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழ கங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழ றிஞர் கலைஞரின் படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடி களைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

வெற்றிக்கொடி

ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment