தி.மு.க. - 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் ஓபிசி பிரிவினர் குறித்த கோரிக்கைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

தி.மு.க. - 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் ஓபிசி பிரிவினர் குறித்த கோரிக்கைகள்

featured image

இன்று, 27.02.2024, திமுக 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சார்பில், தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்..இளங்கோவன், மேயர் பிரியா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் எழி லரசன், டாக்டர் நா.எழிலன் ஆகியோர் சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்காக, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பிலிருந்து: பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, துணைத் தலைவர் ஏ.ராஜசேகரன், (அய்.ஓ.பி.), செயலாளர் ஜி.சுரேஷ் (எச்.வி.எஃப். ஆவடி), ஆகியோர் தலைவர் மற்றும் குழு உறுப் பினர்களைச் சந்தித்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த மிக முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தோம்.
மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள்:
1. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மய மாக்குவது நிறுத்தப்பட வேண்டும்.
2. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் முழு மையாக நிறைவேற்றப்பட வேண்டும். மிக முக்கியமாக:
அ. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
ஆ. உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு.
இ. தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஆகியவை முன்னுரிமை தரப்பட வேண்டும்.
3. ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
4. பிற்படுத்தப்பட்டோர் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்.
5. ஓபிசி பிரிவினருக்கு தனி அமைச்சகம் மற்றும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு உரிய நிதி ஒதுக்கீடு.
6. ஓபிசிக்கான இடஒதுக்கீடு சட்டம், தமிழ்நாட்டில் உள்ளது போன்று ஒன்றிய அரசிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
7. இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும் மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு சதவீதம் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும்.
8. அந்தந்த மாநில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத் துறைகளில் கிளார்க் பதவிகள் மற்றும் அதற்கு சமமான பணியிடங்கள் உட்பட குரூப் சி பணியிடங்களுக்கு மாநில மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
நமது கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்திட ஆவன செய்திடுவதாக குழுவினர் தெரிவித்தனர்.
– கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு

No comments:

Post a Comment