அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை

 « சமூகநீதி ஒரு மாநிலப் பிரச்சினையல்ல - இந்தியா முழுமைக்குமான பிரச்சினை!

« முதல் சட்டத் திருத்தம் வரக் காரணமாக இருந்தவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்!

« சமூகநீதியில் பொருளாதார அளவுகோல் பொருத்தமானதல்ல!

« எங்கெங்கெல்லாம் புறக்கணிப்பு நடைபெறுகிறதோ, அங்கிங்கெல்லாம் தேவைப்படுவது சமூகநீதி என்னும் மாமருந்து!

சமூகநீதி, சமதர்மம், சகோதரத்துவம் உருவாக்க 

நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்!

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்துக்கு மட்டும் சொந்தமல்ல; இந்தியாவுக்கே தேவைப்படக்கூடியது. அதற்காக இந்தியா முழுவதும் உள்ள சமூகநீதி சக்திகள் ஒன்றுபடவேண்டும் என்று மாநாட்டுக்குத் தலைமை வகித்த தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

அவரது உரை வருமாறு:

அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் முதல் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் வரவேற்று உரையாற்றிய அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஈஸ்வரய்யா அவர்களே!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் மாண்புமிகு அசோக் கெலாட் அவர்களே!

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் மாண்புமிகு ஹேமந்த் சோரன் அவர்களே!

பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் அவர்களே!

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா அவர்களே!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா அவர்களே!

திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ' பிரையன் அவர்களே!

கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் வீரப்ப மொய்லி அவர்களே!

தமிழ்நாட்டில் இருந்து பங்கெடுத்திருக்கும் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர் களான அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களே!

அண்ணன் வைகோ அவர்களே!

சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே!

பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்களே!

சகோதரர் ஈஸ்வரன் அவர்களே!

சகோதரர்  வேல்முருகன் அவர்களே!

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு அவர்களே!

கனிமொழி அவர்களே!

திருச்சி சிவா அவர்களே!

இராசா அவர்களே!

வில்சன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே!

காணொலி வாயிலாகவும், நேரிலும் வந்து உரை யாற்றியிருக்கக்கூடிய பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்திருக்கக்கூடிய தோழர்களே!

சமூகநீதியில் அக்கறை கொண்ட பெருமக்களே உங்கள் அனைவருக்கும் நான் வணக்கம் தெரிவிக்கிறேன்!

அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் சார்பில் இந்த இணைய வழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள கழக மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் நடவடிக்கைகளை விட சமூகநீதி நடவடிக் கைகளில் அதிக அக்கறை கொண்டவர் வில்சன் அவர்கள்.

அதனால்தான் அகில இந்தியா முழுமைக்குமான மாநாடாக இதனை ஒருங்கிணைத்துள்ளார்.

சமூகநீதி எல்லோரையும் இணைத்துள்ளது

ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூகநீதி, நம்மை எல்லாம் இணைத்துள்ளது!

மாநிலத்தின் முதலமைச்சர்கள் - அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் - மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - மேனாள் நீதியரசர்கள் -  மூத்த வழக்குரைஞர்கள் ஆகியோரை இணைத்துள்ளோம்.

சமூகநீதியைக் காக்கும் கடமை, நமக்குத்தான் இருக்கிறது! அதனால்தான் இணைந்துள்ளோம்.

சமூகநீதியை அடையவேண்டும் என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒருசில மாநிலங்களின் பிரச்சினையும் அல்ல. இது, இந்திய சமூக அமைப்பு முறைச் சார்ந்த அனைத்து மாநிலங்களின் பிரச்சினை!

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஜாதி - வகுப்பு அள வீடுகள் வேறுபடலாம். ஆனால், பிரச்சினை ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு! எங்கெல்லாம் புறக்கணிப்பு - ஒதுக்குதல் - தீண்டாமை - அடிமைத்தனம் - அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.

பாம்பின் விஷத்தை நீக்க விஷமுறிவாக அந்த விஷமே பயன்படுவதைப் போல, ஜாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை உயர்த்த அந்த ஜாதியே பயன்படுகிறது.

அதுதான் இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதிக் கருத்தியல்!

இந்தச் சமூகநீதிக் கருத்தியலும் யார் எந்த நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் வெற்றியும் பலனும் இருக்கும்.

அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் - தமிழ்நாடே காரணம்!

சமூகரீதியாக - கல்விரீதியாக புறக்கணிக்கப்பட்டவர் களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதி!

சமூகரீதியாகவும் -  கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வர்கள் என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவில்'socially and educationally'  என்பதுதான் வரை யரையாக உள்ளது. அதே சொல்தான் அரசமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது.

அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்ட வரையறை!

இந்தத் திருத்தத்துக்கு காரணமான மாநிலம் அன்றைய சென்னை மாகாணம்!

இந்தத் திருத்தத்துக்குக் காரணமான தலைவர்கள் தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும்!

‘‘சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகை களை அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக் காது'' என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தில் செய்யப் பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம்!

இந்த திருத்தத்துக்குக் காரணம், ''happenings in madras'' தான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு அவர்கள். அதனால்தான் சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

பொருளாதார அளவுகோல் சரியானதல்ல!

'Socially and educationally'என்பதில் economically  என்பதை வஞ்சகமாக சேர்த்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

Economically - அதாவது பொருளாதார அடிப் படையில் இடஒதுக்கீடு தந்துவிட்டார்கள் பா.ஜ.க.வினர்.

பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல.

இன்று ஏழையாக இருப்பவர் - நாளை பணக்காரர் ஆகலாம்.

இன்று பணக்காரராக இருப்பவர் - நாளையே ஏழை ஆகலாம்.

பணம் இருப்பதையே ஒருவர் மறைக்கலாம்.

எனவே, இது சரியான அளவுகோல் அல்ல.

உயர் ஜாதி ஏழைகள் என்று சொல்லி இடஒதுக்கீடு தருகிறது பா.ஜ.க. அரசு. இது சமூகநீதி அல்ல. 

ஏழைகளுக்காக எந்தப் பொருளாதார உதவியையும் செய்வதை நாங்கள் தடுக்கவில்லை.

அது பொருளாதார நீதியாகுமே தவிர - சமூகநீதி யாகாது.

ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகளும் தானே இருக்க முடியும்? அதில் என்ன உயர் ஜாதி ஏழைகள்?

ஒடுக்கப்பட்ட ஜாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா?

அதனால்தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம்.

இட ஒதுக்கீட்டால் தகுதி - திறமை போய்விட்டது என்பவர்கள் உயர்ஜாதியினருக்கு பொருளாதார அளவுகோல் கொண்டு வந்தது முரண்பாடல்லவா!

உயர் ஜாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம்.

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரைச் சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.

இதன் வன்மமான எண்ணத்துக்கு அதிகம் விளக்கம்  சொல்லத் தேவையில்லை. 

இடஒதுக்கீடு மூலமாக அனைத்து சமூக மக்களும் படித்துவிடுகிறார்கள் - வேலைக்குப் போய்விடுகிறார்கள் என்ற வன்மம்தான் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று சொல்ல வைக்கிறது.

10 விழுக்காடு இடஒதுக்கீடு தருவதால் தகுதி போகாதா? திறமை போகாதா?

100 ஆண்டுகளுக்கு முன்னால் - 200 ஆண்டுகளுக்கு முன்னால் - உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற காலம் இருந்தது அல்லவா? அதனை உருவாக்க நினைக்கிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும்.

சமூகநீதி கொலை செய்யப்படுவதா?

சமூகநீதி என்ற பெயரால் சமீபத்தில் கருநாடக மாநிலத்தில் செய்யப்பட்ட செயல்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

★இசுலாமியர்களுக்கான தனி இடஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களை உயர் ஜாதி ஏழைகள் என்ற பிரிவில் சேர்த்துள்ளார்கள்.

★ இசுலாமியர்களிடம் இருந்து பறித்து வேறு இரண்டு சமூகத்துக்குப் பிரித்துக் கொடுத்து இசுலாமியர்களுக்கும், அந்தச் சமூகத்துக்கும் மோதலை உருவாக்கி இருக்கிறார்கள்.

★ அதேபோல பட்டியலின மக்களுக்குக்குள் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

நடக்க இருக்கும் கருநாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இதனை செய்துள்ளார்கள்.

பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள் - வாக்களிக்காதவர்கள் என்று நினைத்து இந்தப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிப்படையாகவே சமூகநீதி கொலை செய்யப்பட்டுள்ளது கருநாடகாவில்!

★பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

★ பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

★சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

★நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

★இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.

★ஜாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்தி- அதன் தரவுகளை வெளியிட வேண்டும்.

இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். மாநில அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.

தி.மு.க. ஏற்படுத்தியுள்ள இட ஒதுக்கீடு கண்காணிப்புக் குழு

★திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது.

இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்! வழிகாட்டும்! செயல்படுத்தும்!

இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்த வகையில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

தி.மு.க. சார்பில் ஸ்டடி சர்க்கிள்

★தி.மு.க. சார்பில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமூகநீதி வரலாற்றை எடுத்துச் சொல்லும் வகையில், ஷிtuபீஹ் சிவீக்ஷீநீறீமீs ஆரம்பித்து, கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இணைய மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும், அவரவர் மாநிலங்களில் தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் - மகாத்மா ஜோதிராவ் புலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்களில் ஷிtuபீஹ் சிவீக்ஷீநீறீமீs தொடங்கி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குச் சமூகநீதிப் பற்றிய புரிதலையும் - விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்.

இந்தியா முழுமைக்கும்

* கூட்டாட்சியை 

* மாநில சுயாட்சியை 

* மதச்சார்பின்மையை

* சமத்துவத்தை

* சகோதரத்துவத்தை

* சமதர்மத்தை 

* சமூகநீதியை - நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும்.

அது வெறும் குரலாக மட்டும் இருக்க முடியாது. தனித்தனி குரலாக மட்டும் இருந்தால் பயனில்லை. கூட்டுக் குரலாக - கூட்டணிக் குரலாக அமைய வேண்டும்.

அனைவரும் ஒன்றுபடுவது அவசியம்!

எத்தகைய உன்னதமான கருத்தியலாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கு - அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட சக்திகளின் ஒற்றுமை என்பது மிகமிக அவசியம்.

அத்தகைய ஒற்றுமை ஓரிரு மாநிலத்தில் மட்டும் உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அது அகில இந்தியா முழுமைக்குமானதாக ஒன்றாதல் வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டமைப்புகள் அடித்தளம் அமைக்கும்.

சமூகநீதி இந்தியாவை உருவாக்க - சமதர்ம இந்தியாவை உருவாக்க - சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.)

நன்றி! வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் 

பங்கேற்றோர்

இம்மாநாட்டில், மாண்புமிகு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் 

தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி, அசோக் கெலாட், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்,  ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் வீரப்ப மொய்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்  எம்.எச். ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமானஈ.ஆர். ஈசுவரன், அசாம்  நாடாளுமன்ற உறுப்பினர் நபா குமார் சாரானியா, அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன், றிகிநிகிகிவி தேசிய அழைப்பாளர்  டாக்டர் பி.என். வாங், கிமிளிஙிசி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி. கருணாநிதி, அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் மத்திய கமிட்டி பொதுச்செயலாளர் ஜி.தேவராஜன், இந்திய மக்கள் கட்சியின் மேனாள் தலைவர் டாக்டர் பி.டி. போர்கார், ஙிகிவிசிணிதி தேசியத் தலைவர் டாக்டர் வாமன் மேஷ்ராம், டில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் டாக்டர் லஷ்மன் யாதவ், டாக்டர் சுராஜ் மண்டல், டாக்டர் ரத்தன் லால்,  சம்விதான் பச்சாவோ சங்கர்ஷ் சமிதியின் டாக்டர் அனில் ஜெயிந்த், மத்தியப் பிரதேசம் -  பிச்சுடா வர்க் சம்யுக்த் சங்கர்ஷ் மோர்ச்சா முதன்மை ஒருங்கிணைப்பாளர் பகதூர் சிங் லோடி, மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், அரியானா லோக்தந்திர சுரக்ஷ கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சயினி, ராஷ்டிரிய சமாஜ்பக்ஷி தேசிய தலைவரும், மகாராட்டிரா மாநில மேனாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர், டாக்டர் கே. கேசவ ராவ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி. முகமது பஷீர், பீகார் - ராஷ்டிரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் மகாராட்டிரா துணை முதலமைச்சருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

முன்னதாக சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளர்  ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஈஸ்வரய்யா வரவேற்புரை ஆற்றினார். அலகாபாத் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீரேந்திர சிங் யாதவ் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment