பாரம்பரிய பெருமை பெற்ற அண்ணா பல்கலைக் கழகப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 24, 2020

பாரம்பரிய பெருமை பெற்ற அண்ணா பல்கலைக் கழகப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்க!

பெயர் மாற்ற மசோதாவை மறுமுறை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்புவது சாலச் சிறந்தது!


கல்வி உதவித் தொகை நிறுத்தத்தால் மாணவர்கள் வேதனை!



 பாரம்பரிய பெருமை பெற்ற அண்ணா பல்கலைக் கழகப் பெயர் மாற்றத்தைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், பெயர் மாற்ற மசோதாவை தமிழக அரசு மறுமுறை பரிசீலிக்க - ஆளுநர் திருப்பி அனுப்புவது சாலச் சிறந்தது என்றும், கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) நிறுத்தத்தால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர்;  அதனையும்  கருணை உள்ளத்தோடு பரிசீலிக்கவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


தமிழ்நாட்டின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றாக சென்னை அண்ணா பல்கலைக் கழகம் திகழுகிறது.


பாரம்பரியப் பெருமை பெற்றது!



கடந்த 42 ஆண்டுகளாக இது மிகவும் சிறப்பாக உலக அளவில் சிறந்த பல்கலைக் கழகமாக, கிண்டி என்ஜினியரிங் கல்லூரி என்ற நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற பாரம்பரியப் பெருமையும் பெற்றது.


இதில் படித்து, தொழில்நுட்ப மேதை களாகி, உலக நாடுகள் பலவற்றிலும் பழைய மாணவர்கள் சிறப்பான புகழ்பெற்றவர் களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.


இப்பல்கலைக் கழகம் 42 ஆண்டுகால வரலாற்றில் உலக நாடுகளில் உள்ள பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடனும், ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், தொழில் நுட்ப நிறுவனங்களுடனும் பல புரிந்துணர்வு (MOU - Memorandum of Understanding) ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது.


இதில் ஆராய்ச்சி செய்யும் பல மாண வர்களுக்கு உதவிகள் (Grants) மற்றும் ஆராய்ச்சிக்கான செலவுத் தொகைக்கான ஏற்பாடுகளும்கூட, இணைந்து நடந்து வருகின்றன.


எதிர்கால வளர்ச்சியில்


பெரும் பின்னடைவும்,


முட்டுக்கட்டையும் ஏற்படும்!


இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றும் சட்டத்தை அவசர கோலத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதால், பெரும் சட்ட சிக்கலும், பல்கலைக் கழக எதிர்கால வளர்ச்சியிலும் பெரும் பின்னடைவும், முட்டுக்கட்டையும் ஏற்படக்கூடும்.


இதற்கு முன்னே இதுபற்றி ஆராயும் குழுவில், அதன் கல்வி நிபுணர்களோ, பேராசிரியர்களோ, ஓய்வு பெற்ற அதன் நிர்வாகிகளோ இடம்பெறாமல் வெறும் 5 அமைச்சர்கள் குழு என்று மட்டுமே போட்டது அடிப்படையான அணுகுமுறை கோளாறு ஆகும்.


அண்ணா பல்கலைக் கழக வேந்தருக்குக் கடிதம்!


இப்போது இதனால் ஏற்படும் பாதகங் களையும், வளர்ச்சிக்கான தடை களையும்பற்றி அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், முன்னாள் இயக்குநர், மூத்த ஓய்வுபெற்ற தொழில்நுட்பக் கல்வி யாளர் பேராசிரியர் டாக்டர்


டி.ஆர்.ஜெகதீசன் அவர்களும், அண்ணா பல்கலைக் கழக வேந்தர் (ஆளுநர்) பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்மூலம் விரிவாக விளக்கி கடிதமும் எழுதியுள்ளது இன்று நாளேடு களில் வெளிவந்துள்ளது.


அண்ணா பல்கலைக் கழகத்தின் IOE  தகுதியை தக்க வைத்துக் கொள்ளவும், பல்வகை ஆராய்ச்சியாளர்களின் (ஸ்கோப்பஸ் இன்டெக்ஸ்) (Scopus Index) Qs ranking, H index, ilo index முதலியவை தொடரவும், பழைய ஒரிஜினல் பெயர் இருந்தால் மட்டுமே முடியும்; இல்லா விட்டால் உலக அளவில் (பல நிறு வனங்களில் ஒப்பந்தங்கள் உள்ளதால்) பெரும் சட்ட சிக்கல்கள் ஏற்படும்.


ஆளுநர் ஒப்புதல் தராமல் - மசோதாவை திருப்பி அனுப்புவது சாலச் சிறந்தது!


எனவே, மறுபரிசீலனை அவசியம் செய்யப்படவேண்டும். இது அவசரம், அவசியம்.


அண்ணா பல்கலைக் கழக பெயர் மாற்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் - சட்ட மசோதாவினை மறுமுறை பரிசீலிக்க தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்புவதும் சாலச் சிறந்தது!


இது முழுக்க முழுக்க அண்ணா பல்கலைக் கழக வளர்ச்சி, அங்குள்ள ஆய்வாளர்களின் தொடர் ஆராய்ச்சிப் பணியால் எழும் நியாயமான கோரிக்கையே தவிர, எந்த அரசியல் நோக்கமும் உடை யதல்ல.


மறுபரிசீலனை செய்க!


அதோடு, பல மாணவர்களுக்கு அளித்து வந்துள்ள கல்வி உதவித் தொகைகளும் - ஸ்காலர்ஷிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆராய்ச்சி மாணவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்து, அது தொடரவேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்களது ஆராய்ச்சி - படிப்பு தடையின்றி தொடர, தமிழக அரசும், அண்ணா பல் கலைக் கழக நிர்வாகமும் மனிதநேயத் தோடும், கருணை உள்ளத்தோடும் இதனை மறுபரிசீலனை செய்வதும் அவசர அவசியமாகும். இதுபற்றி விரைந்து முடிவு எடுப்பது முக்கியமாகும்.


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


24.9.2020


No comments:

Post a Comment