புதுச்சேரி,மே26, புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 நாள்களாக புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தடுக்க புதுவைக்கு அனுமதி இல்லாமல் வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிதி உதவி திட்டங்கள் ஏழை மக்களுக்கும் சிறு சிறு தொழிற்சாலைகளுக்கும் பயனளிக்கக் கூடியதாகும். மக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்களது வாங்கும் சக்தி அதிகரிக்கும். யூனியன் பிரதேசங்களில் மின்சார வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் விவசாயிகள், ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சார வினியோகம் தனியார் மயமாக்கப்பட்டால் இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படும். எனவே தனியார் மயத்தை நாம் ஏற்கமுடியாது. தற்போதைய நிலை நீடித்தால் தான் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் இலவச மின்சாரம் கிடைக்கும் என நான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மின்சாரம் வினியோகம் தனியார் மயமானால் யாருக்கும் பலன் கிடைக்காது. எனவே மின்சார வினியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. மத்திய அரசானது எந்த நிபந்தனையுமின்றி மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை தர வேண்டும். இந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாது. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment