காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதாம் கருநாடக முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதாம் கருநாடக முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

featured image

சென்னை, ஜூலை 13- காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-ஆவது கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் (11.7.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று (12.7.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து இருப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் சித்தராமையா, “கருநாடகத்தில் இந்த முறை இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மய்யம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அணை களில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது. தற்போது காவிரி அணைகளில் 60 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது. இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

கருநாடக அரசின் இந்த முடிவு தமிழ்நாடு விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காவிரிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
காவிரியில் நாள்தோறும் ஒரு டி.எம்.சி. நீர் இந்த மாதம் (ஜூலை) இறுதி வரை வழங்க வேண்டும் என்று கருநாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த ஒழுங்காற்று குழு என்பது தமிழ்நாடு குழு அல்ல. தமிழ்நாடு கருநாடகம் என 2 மாநிலத்திற்கும் பொதுவான குழு. இது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு.
இந்த குழு கருநாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பை கணக்கெடுத்து கருநாடகத்தின் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. வீதம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கருநாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் விளையாடுகிறபோது அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருக்கிறது. இதே ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு கூட பாதகமாக பலமுறை கருத்து சொல்லி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது உச்சநீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து சொல்வது போன்றதாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். உச்சநீதிமன்றம் கருநாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.

தமிழ்நாட்டுக்கும், உச்சநீதிமன்றம் செல்வதற்கு வழி தெரியும். இந்த விவகாரத்தில் பிரச்சினை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கருநாடக முதலமைச்சர் சித்தராமையா. அதுபோலவே நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாக தெரியும்.
-இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

No comments:

Post a Comment