மேட்டூர் அணைக்கு 4197 கன அடி நீர்வரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

மேட்டூர் அணைக்கு 4197 கன அடி நீர்வரத்து

featured image

மேட்டூர், ஜூலை 12 மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடி நீர் வரத்து உள்ளது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,197 கன அடியாக உள்ளது.
நேற்று காலை (11.7.2024) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.15 அடியிலிருந்து 41.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும்நீரின் அளவு வினாடிக்கு 4,521 கன அடியிலிருந்து 4,197 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.95 டிஎம்சியாக உள்ளது.

ரயில் விபத்து தொடர்கதை
விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்
தடம் புரண்டது

நாகர்கோவில்,ஜூலை 12- நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக அசாம் மாநிலம் திப்ரூகருக்கு விவேக்எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாள்தோறும் மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் திப்ரூக ரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் இந்த ரயில் நாகர்கோவிலுக்கு இரவு 9.30 மணிக்கு வரும். பின்னர் இரவு 9.55 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

நேற்று முந்தைய நாள் (10.7.2024) இரவு 9.30 மணிக்கு நாகர்கோவில் வர வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 11.30 மணிக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு அந்த ரயில் (11.7.2024) கன்னியாகுமரிக்கு பகல் 12 மணிக்கு போய் சேர்ந்தது.

பின்னர் பராமரிப்பு பணிக்காக இந்த ரெயில் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் 4-ஆவது நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் காலி பெட்டிகளுடன் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் பராமரிப்பு பணிக்காக யார்டுக்கு கொண்டு செல்வதற்காக மதியம் 12.40 மணியளவில் கடைசி பெட்டியுடன் என்ஜினை இணைப்பதற்கான பணி நடைபெற்றது. ரயில் என்ஜின், பெட்டியுடன் இணைக்கப்பட்டபோது என்ஜின் வந்து இடித்ததில் அந்த காலி ரயில் பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கியது. இதனால் ரயில் நிலையத்தில் பயங்கர சத்தம் கேட்டது. ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ரயில் நிலைய மேலாளர் முத்துவேல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். ரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மட்டும் 4-ஆவது நடைமேடை தண்டவாளத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு என்ஜின் மூலம் மற்ற பெட்டிகள் பராமரிப்பு பணிக்காக யார்டுக்கு கொண்டு செல் லப்பட்டன

திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தடம் புரண்ட பெட்டி மாலையில் மீட்கப்பட்டது. இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

No comments:

Post a Comment