213 தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கும் திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

213 தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கும் திட்டம்!

featured image

சென்னை, ஜூலை 9- தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 213 தூய்மைப் பணியாளர் களுக்கு சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் குழாய்களை பராமரிக்க பயிற்சி வழங்கப்பட்டது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணி யாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களை தொழில் முனைவோராக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தொழில்முனைவோ ராக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவுநீர் குழாய்களை இயந்திரங்கள் மூலம் பராமரிக்கும் பயிற்சி வழங்கும் முகாம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரியபயிற்சி மய் யத்தில் நேற்று (8.7.2024) நடைபெற்றது.

சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனை வோராக மாற்றும் உன்னதமான முயற்சிக்கான வழிகாட்டுதலில், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு செய்யப்பட்டது.

அதன்படி, இறந்த தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்கள், தூய்மைப் பணியாளர்கள், சமூக பொருளாதார நிலையை மேம்படுத் தும் வகையில் தகுதியான213 பேரை கண்டறிந்து, அவர்களைதொழில் முனைவோராக மாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடன் உதவிக்கான ஆணைகளை முதல மைச்சர் ஸ்டாலின் அண்மையில் வழங்கினார்.

இவர்களை சென்னை குடிநீர் வாரிய கழிவுநீரகற்று பணிகளில் ஈடுபடுத்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 7 ஆண்டுகளுக்கு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.524 கோடி இறுதி செய்யப்பட்டுள்ளது.
2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாகனம் வைத்திருப்போர், ஒரு மீட்டர் நீள கழிவுநீர் குழாயை பராமரிக்க ரூ.17.60, ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாகனம் வைத்திருப்போர் ஒரு மீட்டர் நீளத்துக்கு பணியாற்ற ரூ.20.70 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர் தாங்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்வதற்கும் இத் திட்டம் உறுதுணையாக இருக்கும் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்க தேசிய தலைவர் ரவிக்குமார் நர்ரா, தென்னிந்திய தலைவர் சவுந்தர ராஜன், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் ஜெய்கர் ஜேசுதாஸ், தலைமை பொறியாளர் இரா.சிவமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment