ஜூலை 11 : உலக மக்கள் தொகை நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

ஜூலை 11 : உலக மக்கள் தொகை நாள்!

featured image

ஆண்டுதோறும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
1987ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை அய்ந்து பில்லியனைத் தாண்டியது. அதனை யடுத்து, இந்நாள் உலகம் முழுவதும் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு முதல் அந்த நாள், உலக மக்கள் தொகை நாளாகக் கொண்டு, மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய நிலையில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியை அய்க்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மேற்கொண்டது. உலக மக்கள்தொகை நாள், குடும்பக் கட்டுப்பாடு, பாலினச் சமத்துவம், வறுமை, தாய்வழி உடல் நலம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல்வேறு மக்கள்தொகைப் பிரச்சினைகளில், மக்களின் விழிப்பு ணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக மக்கள்தொகை கி.பி. 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840 ஆம் ஆண்டில் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 ஆம் ஆண்டில் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும், 1960 ஆம் ஆண்டில் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக மக்கள்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது.
அதாவது, உலக மக்கள்தொகை 1 பில்லியனாக வளர நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது. அதன் பின்னர், இன்னும் 200 ஆண்டுகளில் அது ஏழு மடங்கு அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை எட்டியது, இது 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 7.9 பில்லியனாக உள்ளது. மேலும் இது 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும், 2100 ஆம் ஆண்டில் 10.9 பில்லியனாகவும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வியத்தகு வளர்ச்சியானது, இனப்பெருக்க வயது வரை உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் கருவுறுதல் விகிதங்களில் பெரிய மாற்றங்கள், நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வுகளை துரிதப் படுத்துதல் ஆகியவற்றுடன் சேர்ந்துள் ளது. இந்த போக்குகள் வருங்கால தலை முறைகளுக்கு நீண்ட தாக்கங்களை ஏற்படுத்தும்.

அண்மைக் காலங்களில் கருவுறுதல் விகிதம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவை பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது. 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், பெண்கள் சராசரியாக தலா 4.5 குழந்தைகளைப் பெற்றனர். 2015 ஆம் ஆண்டில், உலகின் மொத்த கருவுறுதல் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளுக்குக் குறைந்து விட்டது. இதற்கிடையில், சராசரி உலகளாவிய ஆயுட்காலம் 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 64.6 ஆண்டுகளில் இருந்து 2019 இல் 72.6 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. மேலும், உலகம் நகரமயமாக்கலை அதிகரித்திருப்பதுடன் இடப் பெயர்வுகளை விரைவுபடுத்துகிறது.

கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்க ளில் அதிக மக்கள் வாழ்ந்த முதல் ஆண்டு 2007 ஆகும். வருகிற 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 66 சதவீதம் பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, வருமானப் பகிர்வு, வறுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றையும் பாதிக்கக்கூடும். சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வீடு, சுகாதாரம், தண்ணீர், உணவு மற்றும் எரிசக்திக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்வதற்கான முயற்சிகளையும் பாதிக்கும். தனி நபர்களின் தேவைகளை இன்னும் நிலையானதாகச் சரி செய்யப் பல்வேறு புதியத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment