இந்தியா முழுமையும் 'இந்தியா' கூட்டணிக்கு தனித் தொகுதிகளில் அதிக வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

இந்தியா முழுமையும் 'இந்தியா' கூட்டணிக்கு தனித் தொகுதிகளில் அதிக வெற்றி

புதுடில்லி. ஜூன் 7- நாடு முழுவதிலும் உள்ள தனித்தொகுதிகளில் பாஜகவிற்கு செல்வாக்குகுறைவதாகத் தெரிகிறது. இந்த தொகுதிகளில் இந்தியா கூட்டணி 61இல் வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து மாநிலங்களின் மக்களவை தொகுதிகளில் தனித்தொகுதிகளாக மொத்தம் 131 உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் பாஜக இதன் 82 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த எண்ணிக்கை பாஜகவிற்கு 2024இல் குறைந்து 53 என்றாகி விட்டது.

மொத்தம் உள்ள எஸ்சி தொகுதிகள் 82இல் பாஜகவிற்கு 46 கிடைத்தது. இந்த தேர்தலில் பாஜகவிற்கு 28 எஸ்சி தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதேபோல், 47 எஸ்டி தொகுதிகளில் பாஜக கடந்தமுறை 31 பெற்றிருந்தது. இது தற்போது 25-ஆக குறைந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந் தியா கூட்டணிக்கு இந்த தனித்தொகுதிகளில் நல்ல பலன் கிடைத்துள்ளது. 131இல்அதன் உறுப்பினர்களுக்கு 61 தொகு திகள் கிடைத்துள்ளன. 82 எஸ்சி தொகுதிகளில் கடந்தமுறை 10 பெற்ற காங்கிரஸ் தற்போது 21 பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு(என்டிஏ) 63 தனித்தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் தென் பகுதி, கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் என்டிஏ விற்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

மகராட்டிராவின் 9 தனித்தொகுதிகளில் பாஜக ஒன்று மட்டுமே பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் 17இல் 8 மட்டும் கிடைத்துள்ளது. ஜார்க்கண்டின் ஆறு தனித்தொகுதிகளில் பாஜக ஒன்றை பெற்றுள்ளது. கர்நாடகாவின் 7இல் 2, தெலங்கானாவின் 5இல் 1 என பாஜகவிற்கு கிடைத்துள்ளது.காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசிக்களுக்கான இட ஒதுக்கீடுகளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவற்றை முஸ்லிம்களுக்கு அளித்து விடும் என பாஜக தலைவர்கள் பேசினர். இதை பொதுமக்கள் ஏற்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.

தலித் ஆதரவுக் கட்சியாக செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தனித்தொகுதிகளில் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. இந்தமுறை மக்களவை தேர்தலில் இரண்டு கூட்டணிகளும் இடஒதுக்கீட்டில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக் கொண்டனர். இதில், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒபிசி, எஸ்சி-எஸ்டி இடஒதுக்கீடுகளை ரத்து செய்து அதை முஸ்லிம்களுக்கு அளித்து விடுவார்கள் எனப் புகார் வைத்தனர். இதேபோல், இண்டியா கூட்டணி தலைவர்கள் பாஜகவினர் ஆட்சிக்கு வந்தால் அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்வார்கள் எனப் புகார் வைத்தனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனித்தொகுதிகளில் கிடைத்த தொகுதி களை பார்த்தால், பாஜகவினர் கூறிய புகார் எடுபடவில்லை எனத் தெரிகிறது. இதைப்போல், இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்வைத்த புகார்களுக்கு முடிவுகளில் பலன் கிடைத்துள்ளதை காட்டுகிறது. இதன்மூலம், பாஜக தனித்தொகுதிகளில் தன் செல்வாக்கை இழந்து வருகிறதா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment