நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்பட்டுள்ளன தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும் கோவை முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்பட்டுள்ளன தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும் கோவை முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

featured image

சென்னை, ஜூன் 16- “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் காப் பாற்றப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நேற்று (15-06-2024) கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு:


கோவைக்குக் கடந்த முறை வந்ததை நினைத்துப் பார்க்கிறேன். தேர்தல் பரப்புரைக்காக வந்தபோது எவ்வளவு சிறப்பாகக் கூட்டம் நடைபெற்றதோ அதைவிடச் சிறப்பான வெற்றியையும் கொடுத்து மிகப்பிரமாண்டமாக இந்த வெற்றி விழாவை ஏற்பாடு செய்திருக்கும் மாண்புமிகு அமைச்சர்கள், செயல்வீரர் முத்துசாமி அவர்களுக்கும், தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும், ஒன்றுபட்ட கோவை மாவட்டக் திமுக செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு சுவீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார்! சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது! அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் முடிவு களைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நாற்பதும் நமதே என்று முழங்கினேன்! நடக்குமா? நடக்க விடுவார்களா? என்று பலரும் யோசித்தார்கள். ஆனால், நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நம்பிக்கைக்கு அடித்தளம் யார்? கொள்கைக்காக இங்கே கூடியிருக்கும் நீங்கள்தான் என்னுடைய நம்பிக்கைக்கு அடித்தளம்! இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்கள்தான் அந்த நம்பிக்கைக்கு ஆதாரம்!

எப்படிப்பட்ட தொண்டர்கள் இந்த இயக்கத்திற்குக் கிடைத்திருக்கிறார்கள்! “வெட்டி வா” என்று சொன்னால் “கட்டி வருகிறவர்கள் மட்டுமல்ல”, அதை வைத்துக் கோபுரம் எழுப்பக் கூடியவர்கள் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்! இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, காலத்தை உங்களுடைய கடமைக்காக மட்டுமே ஒப்படைத்து, நாற்பதுக்கு நாற்பது மட்டும்தான் நம்முடைய இலக்கு என்று நாளும் உழைத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் – இந்தியா கூட்டணிக் கட்சித் தோழர்கள் அத்தனை பேரும் இருக்கின்ற திசையை நோக்கி நான் வணங்குகிறேன்.
இந்த வெற்றிவிழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடை பெறும் பாராட்டு விழா அல்ல; இந்த மேடையில் இருக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது! இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது! எனவே, இங்கே பேசிய தலைவர்கள் என்னை நோக்கி வழங்கிய பாராட்டுச் சொற்களை மாலைகளாகக் கோத்து, தொண்டர்களான – தோழர்களான – உடன்பிறப்புகளான உங்களுக்கு, உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின் காணிக்கை ஆக்குகிறேன்!

இது சாதாரண வெற்றி இல்லை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி! இந்தக் கூட்டத்தை ஊடகங்கள் வழியாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் தொண்டர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி! எல்லாவற்றுக்கும் மேல், நம்முடைய அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களே தமிழ்நாட்டு மக்கள், அவர்களுக்கான வெற்றி! புதிய வரலாற்றைப் படைப்பதற்கான வெற்றி!

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றியைத் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குப் பெற்றுத் தந்தார். அன்றைக்கு இருந்த நிலைமை என்ன? அப்போது ஆளுங்கட்சி அ.தி.மு.க! அந்தத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை உணர்ந்து, அம்மையார் ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினார்கள். உடனே செய்தியாளர்கள் தலைவர் கலைஞரிடம் அதைப்பற்றி கேட்டார்கள்… அவர் சிரித்துக்கொண்டே “இது எங்களுடைய 41-ஆவது வெற்றி” என்று சொன்னார்.

அதுமட்டுமில்லை, 2004 கருத்துக்கணிப்புகளில், ஒன்றிய அளவில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது. இப்போதும் அதே மாதிரிதான், பா.ஜ.க. 400 இடங்கள் வரை கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், அதை உடைத்து பா.ஜ.க.வால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியிருக்கிறோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோமே… இதுதான் தலைவர் கலைஞர் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி!
2004-இல் நாம் 40-க்கு 40 வெற்றி பெற்றபோது ஆளும் அ.தி.மு.க. மீதான அதிருப்தியில் பெற்ற வெற்றி என்று சிலர் சொன்னார்கள்… அது அதிருப்தி என்றால், 2024-இல் பெற்றிருக்கின்ற 40-க்கு 40 வெற்றி, நம்முடைய திராவிட மாடல் அரசு மேல், மக்களுக்கு இருக்கிற திருப்தியில் கிடைத்திருக்கின்ற வெற்றி! ஆனால், அதைப் பற்றி யாரும் சொல்லமாட்டார்கள்!

நம்முடைய தொடர் வெற்றிக்குக் காரணம் என்ன, கொள்கை உறவோடு கடந்த அய்ந்து தேர்தல்களாகத் தமிழ்நாட்டில் தொடருகின்ற நம்முடைய கூட்டணி ஒற்றுமைதான் நம்முடைய வெற்றிக்கு அச்சாணி! அதனால்தான் நான் இப்போதும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்களுக்கிடையில் இருப்பது வெறும் தேர்தல் உறவு கிடையாது; கொள்கை உறவு!

இங்கே மட்டுமில்லை, 2023-இல் நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்திலேயே அகில இந்திய தலைவர்கள் அருகில் வைத்துக் கொண்டே “காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது” என்று மேடையில் அறிவித்தேன். அகில இந்திய அளவில் பா.ஜ.க.-வை தனிமைப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்று எடுத்துச் சொன்னேன். எல்லாவற்றையும்விட நாட்டின் எதிர்காலமும் ஜனநாயகமும்தான் முக்கியம் என்று தொடர்ந்து சொன்னேன். அதனுடைய விளைவாகத்தான், 28 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்.

நாம் ஒன்று சேரமாட்டோம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. உடனே இந்தக் கூட்டணி ஒன்று சேரக் கூடாது என்று என்னவெல்லாம் செய்தார்கள்… ஒவ்வொரு கட்சிகளையும் I.T. – E.D. – C.B.I. – போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வங்கிக் கணக்கை முடக்கினார்கள். டில்லி முதலமைச்சரையும், ஜார்க்கண்ட் முதலமைச்சரையும் கைது செய்தார்கள்.

அதுமட்டுமல்ல, தேர்தல் அறிவித்த பிறகு பா.ஜ.க. என்னவெல்லாம் செய்தார்கள்? விதிகளை மீறி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதுபோன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். சிறுபான்மைச் சமூகத்தினரைத் தரக்குறைவாகப் பேசினார்கள். உத்திரப்பிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தினார்கள். ஏராளமான போலிச் செய்திகளையும், அவதூறுகளையும் பல கோடி ரூபாய் செலவில் வாட்ஸ்ஆப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும், பா.ஜ.க. வாங்கியது எவ்வளவு? 240 தான்! இந்த 240 என்பது, மோடியின் வெற்றி இல்லை; மோடியின் தோல்வி!

அருமை நண்பர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களும் – மரியாதைக்குரிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களும் ஆதரவு தந்திருக்காவிட்டால் மெஜாரிட்டி ஏது! அவர்களால்தான் மோடி இப்போது பிரதமராக உட்கார்ந்திருக்கிறார்.

நாம் நம்பிய அரசியல் சட்டமும், ஜனநாயகமும்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. 237 உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறோம். பா.ஜ.க. நினைத்தையெல்லாம் செய்ய முடியாது. இப்போதுகூட, தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்று சில அதிமேதாவிகள் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் யாரென்றால்… தங்களை தாங்களே அறிவாளியாக நினைத்துக் கொள்பவர்கள்! ஜனநாயகத்தின் அடிப்படை தெரியுமா அவர்களுக்கு? இப்படி கேள்வி கேட்டு அவர்கள் நம்மை இழிவுபடுத்தவில்லை… நாட்டு மக்களைத்தான் இழிவுபடுத்துகிறார்கள்!

“40 பேர் கேண்டீனில் வடை சாப்பிடச் செல்கிறீர்களா?” என்று சிலர் கேட்கிறார்கள்… வாயால் வடை சுடுவது எல்லாம் உங்கள் வேலை! எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்! Wait and see! இதற்கும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லட்டுமா… கடந்த அய்ந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள் 9 ஆயிரத்து 695 கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதைவிட முக்கியமாக அவர்களுடைய செயல்பாடுகளை அங்கீகரிக்கின்ற இன்னொரு விஷயம் இருக்கிறது… ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஏன், பிரதமர் மோடி என்று ஒட்டுமொத்த பா.ஜ.க. அமைச்சர்களும் தி.மு.க.-வை எதிர்த்துத்தான் நாடாளுமன்றத்தில் அதிகம் பேசியிருந்தார்கள்! இதைவிட வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?

பா.ஜ.க.வுக்கு அதிகப் பெரும்பான்மை இருந்தபோதே, தங்களுடைய வாதங்களால் நாடாளுமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். இப்போது மைனாரிட்டி பா.ஜ.க. அரசு இருக்கும்போது அடங்கிப் போவார்களா? மக்களுக்கான நம்முடைய குரல் இன்னும் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது!

நம்முடைய உறுப்பினர்கள்தான் பா.ஜ.க.வை கொள்கை – கோட்பாடுகள் ரீதியாக அம்பலப்படுத்தினார்கள். அரசியல்ரீதியாக பா.ஜ.க.வை விமர்சிப்பது என்பது வேறு! ஆனால், கொள்கைரீதியாக அவர்களுடைய வகுப்புவாதத்தை, எதேச்சாதிகாரத்தை, பாசிசத்தை விமர்சிக்கின்ற பாணியை இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தவர்கள் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்.

சமூகநீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமாக உரிமைக்குரல் எழுப்பியது மூலமாக, இந்திய அரசியல் செல்ல வேண்டிய பாதையைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த முறை போட்டுக் கொடுத்தார்கள். இந்த முறை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றால்… நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசினார் – ஈ.வெ.கி.சம்பத் பேசினார் – நாஞ்சிலார் பேசினார் – முரசொலி மாறன் பேசினார் என்று இன்றைக்கும் பெருமையாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோமே… அதுபோல, ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் கவனத்தையும் ஈர்க்கின்ற மாதிரி, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற மாதிரி, உங்களுடைய நாடாளுமன்ற உரைகள் ஒவ்வொன்றும் அமைய வேண்டும்! இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை – சமூகநீதியை –மதச்சார்பின்மையை – நாட்டின் பன்முகத்தன்மையை – இந்தியப் பண்பாட்டு விழுமியங்களை – காப்பாற்றுகின்ற மாதிரி அது இருக்க வேண்டும்! அப்படித்தான் அமையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

மேடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களே… நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தோளில் ஏற்றி வைத்திருக்கும் இந்தக் கடமைகளுக்காக – தமிழ்நாட்டு உரிமைகளுக்காக, நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள்! பலம் பொருந்திய எம்.பி.க்கள் சேர்ந்து, பலவீனமான மைனாரிட்டி பாஜக அரசை – பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள். ஒற்றுமை உணர்வுடன் – கொள்கை திறத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் சொன்னதை, மறுபடியும் இங்கே இருக்கின்ற அனைத்து எம்.பி.க்களுக்கும் சொல்கிறேன்… “வாக்களித்த மக்களுக்கு உண்மையாக – உங்களுக்கு வாய்ப்பு வழங்கிய கட்சித் தலைமைக்கு உண்மையாக நடந்து, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்”.

இந்த 40 எம்.பி.க்களை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது… இந்திய அரசமைப்புச் சட்டத்தையே மாற்றிவிட வேண்டும் என்று துடிக்கின்ற பா.ஜ.க.வை தடுக்கின்ற காவல் அரணாக நம்முடைய 40 எம்.பி.க்களும் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.
இது தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டு. ஆண்டு முழுவதும் நாம் கட்சி சார்பாகவும், ஆட்சி சார்பாகவும் நலத்திட்ட நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், கவிதை – கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்கங்கள் – கவியரங்கங்கள் என்று கொண்டாடினாலும், தலைவர் கலைஞருக்குப் பிடித்த பரிசு எது தெரியுமா? தி.மு.க. கூட்டணியின் வெற்றிதான் அவருக்குப் பிடித்த பரிசு!

அவர் எப்படிப்பட்ட தலைவர் என்றால், பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தபோது, தன்னை வந்து சந்தித்த அண்ணாவிடம், அப்போது நடைபெற இருந்த தருமபுரி தேர்தலைப் பற்றித்தான் கலைஞர் முதலில் கேட்டிருக்கிறார். இதைப்பற்றி, பேரறிஞர் அண்ணா என்ன சொன்னார் தெரியுமா? “என் தம்பியை நலம் விசாரிக்கச் சென்றால், அவனோ கழகத்தின் வெற்றியைப் பற்றியே கவலைப்பட்டுக் கேட்டான்” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. அப்படி, எப்போதும், எந்த நேரமும், எந்தச் சூழலிலும் கழகத்தின் வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்தித்த தலைவர் கலைஞருக்கு, ‘நாற்பதுக்கு நாற்பது’ என்பதைவிட சிறப்பான நூற்றாண்டு பரிசு, வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, இன்னும் 24 அமாவாசைதான் இருக்கிறது என்று உளறிக்கொண்டு இருந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்குச் சிதம்பரம் கூட்டத்தில் ஒன்றைச் சொன்னேன். “சட்டமன்றத் தேர்தல் வரட்டும். அ.தி.மு.க.-விடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே தி.மு.க. பறிக்கும். இது உறுதி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த, செய்ய இருக்கிற நன்மைகள் மேல் நம்பிக்கை வைத்துச் சொல்கிறேன்” என்று சிதம்பரத்தில் பேசினேன்.

பழனிசாமி அவர்களே… இப்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகத்தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால், தி.மு.க. கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகித்திருக்கிறது.
அடுத்து, இன்னும் சிறிது நாட்களில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலிலும், நம்முடைய கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாதான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். தொடர் வெற்றியால் எனக்கு மமதை வந்துவிடவில்லை; ஆணவம் ஏற்படவில்லை; மாறாக எனக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

நம்முடைய உழைப்பு வீண் போகவில்லை என்ற மனநிறைவைக் கொடுத்திருக்கிறது; தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது!

இந்த மேடையில் நின்று, வாக்களித்த மக்களுக்கு நான் அளிக்கின்ற உறுதிமொழி என்னவென்றால், “எங்களை நம்பி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது! உங்களுக்காக உழைப்பதுதான் எங்களுடைய கடமை! எங்களுடைய கடமையை நாள்தோறும் செய்வதுதான் நாங்கள் உங்களுக்கு செலுத்தும் நன்றி!” அந்த நன்றி உணர்வுடன் சொல்கிறேன், இனி தமிழ்நாட்டில் எப்போதும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம்.

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் “200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றியது” என்ற இலக்கை நோக்கிய நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்த வெற்றிவிழா கட்டியம் கூறட்டும்! தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! தமிழ்நாடு வெல்க!

நன்றி! வணக்கம்!

No comments:

Post a Comment