சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மய்யம் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மய்யம் திறப்பு

featured image

சென்னை, ஜூன் 8- நாட்டிலேயே முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மய்யம் – பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையி லான இந்த வளாகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.6.2024) திறந்து வைத்தார்.

அப்போது, செய் தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த கருத்தரித்தல் மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் மகப் பேறுகளில் தாய்மார்களின் இறப்பு 70-க்கும் மேல் இருந்தது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, அதில்வெற்றியும் கண்டுள்ளது. இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு 54, கடந்த ஆண்டு 52, இந்த ஆண்டு 45 என படிப்படியாக குறைந்துள்ளது.

இந்தியாவில் 25-45 வயது பெண்களிடம் கருத்தரிப்பின்மை பாதிப்பு 3.9 சதவீதம் இருப்பதை உலக சுகாதார மய்யம் உறுதிப்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைதான் இதற்கான காரணங்களாக உள்ளன.

மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும்: இந்த சூழலில், அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித் தல் மய்யம் அமைக்கப்பட்டி ருப்பது நிச்சயம் மிகப் பெரிய மாற்றத்தை உரு வாக்கும்.

சண்டிகர், டில்லி, மகாராட்டிரா அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மய்யங்கள் ஏற்கெனவே இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக தமிழ் நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுத லுடன் முழுமையாக இலவச செயற்கை கருத்தரித்தல் மய்யம் தொடங்கப்பட்டுள்ளது.  இங்கு அதிநவீன பிரசவ அறை ரூ.89.96 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் விரைவில் திறப்பு:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2ஆவது செயற்கை கருத்தரித்தல் மய்யம் தொடங்குவதற்கான பணி நடந்துவருகிறது. அந்த மய்யமும் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங்பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், மகளிர் நோய் இயல் நிலையம் மற்றும் அரசு தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநர் கலைவாணி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment