இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் நேரில் மனு வாக்கு எண்ணிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் நேரில் மனு வாக்கு எண்ணிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை

புதுடில்லி, ஜூன் 3- வாக்கு எண்ணும் மய்யங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், அஞ்சல் ஓட்டு முடிவுகளை முதலில் வெளியிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் நேற்று (2.6.2024) நேரில் மனு அளித்தனர்.

நாளை வாக்கு எண்ணிக்கை

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை (4.6.2024) எண்ணப்படுகின்றன.
நாடு முழுவதும் நடைபெ றும் இந்த வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. வாக்கு எண்ணும் மய்யங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது.

இந்த வாக்கு எண்ணும் பணிகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி யாக உள்ளன.
இது தொடர்பாக தங்கள் கட்சிகளின் ஏஜெண்டுகளையும் அவை எச்சரிக்கை செய்து உள்ளன.

டி.ஆர்.பாலு, து.ராஜா

மறுபுறம் வாக்கு எண்ணும் பணிகளில் எவ்வித சர்ச்சைகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நேற்று (2.6.2024) தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் நேரில் மனு அளித்தனர்.

அதன்படி அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), து.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), டி.ஆர். பாலு (தி.மு.க) உள்ளிட்ட தலைவர்கள் இந்த மனுவை அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தி யாளர்களை சந்தித்தனர்.

அப்போது அபி ஷேக்சிங்வி கூறியதாவது:-

அஞ்சல் வாக்கு முடிவு

இந்த தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையர்களை எதிர்க்கட்சிகள் சந்திப்பது இது 3ஆவது முறையாகும். இதில் 2-3 முக்கிய பிரச்சினை களை குறிப்பிட்டு மனு அளித்திருக்கிறோம்.

இதில் மிகவும் முக்கிய மாக, வாக்குப்பதிவு எந்தி ரங்களில் பதிவாகி உள்ள வாக்குகளின் முடிவை அறிவிப்பதற்கு முன்பு, அஞ்சல் வாக்குகளின் முடிவை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இந்த நடை முறையை அவர்கள் ரத்து செய்து விட்டனர்.

ஆனால், இது மிகவும் தெளிவாக கூறப்பட்ட சட்டப்பூர்வ விதியாகும். அதாவது வாக்கு எண்ணும்போது முதலில் அஞ்சல் வாக்குகளின் முடிவை அறி விக்கவேண்டும் என விதி உள்ளது.

அந்தவகையில் வாக்கு எண்ணிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
-இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

சீதாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் கட்டுப்பாட்டு அலகுகளை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பகுதிக ளிலேயே கையாள வேண்டும் என்பதும், அவற்றில் தற்போதைய நேரம் மற்றும் தேதியை சரிபார்க்க வேண்டும் என்பதும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தல்கள் ஆகும்.

இந்த சரிபார்த்தல் நடவடிக்கை மிகவும் முக்கியம் ஆகும். இல்லாவிட்டால் அந்த கட்டுப்பாட்டு அலகு வாக்குச்சாவடியில் இருந்து கொண்டு வரப்பட்டதா அல்லது மாற்றப்பட்டுள்ளதா? என்பதில் சந்தேகம் ஏற்படும். மேலும் வாக்குப்பதிவின் தொடக்க மற்றும் முடிவு நேரம் மற்றும் தேதி ஆகியவையும் கட்டுப்பாட்டு அலகில் சரிபார்க்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் சீல் வைக்கப்படும்போது வைக்கப்படும் சீட்டுகள் மற்றும் குறிச்சொற்களை சரி பார்ப்பதற்காக அனைத்து விவரங்களையும் முகவர்களிடமும் காட்ட வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

-இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

No comments:

Post a Comment