மூன்றே நாளில் 31 லட்சம் கோடி சூறை: பங்கு சந்தை: பின்னணி என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

மூன்றே நாளில் 31 லட்சம் கோடி சூறை: பங்கு சந்தை: பின்னணி என்ன?

‘‘தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’’ என்று கடவுளர்களைச் சொல்வார்கள். ஆனால், பணமதிப்பை நீக்கியதிலும் ஊழல், பங்குச் சந்தையிலும் ஊழல் என்ற செய்தி, பாஜக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல்தான் என்பதை பட்டவர்த்தன மாக்கியிருக்கிறது. இதில் கூடவா ஊழல் செய்ய முடியும் என்று வியக்கிறபடி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பைப் பயன்படுத்தியும் மெகா ஊழல் செய்திருக்கிறார்கள்!
பங்குச் சந்தையே வியக்கும் ஊழல்

‘பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும் தேர்தல் முடிவுகள், நிதிநிலை அறிக்கை போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, பங்குச் சந்தைகள் ஏறுவதும், இறங்குவதும் உலகெங்கும் உள்ள ‘இயல்பான’ நிகழ்வுதான். பங்குச் சந்தைகளில் லாபம் பெற, குறிப்பிட்ட பங்குகளைச் செயற்கையாக உயரச் செய்வதும் நடக்கும் என்பதை அதானி பற்றிய ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கைக்குப்பின் பங்குச் சந்தைக்குத் தொடர்பில்லாத மக்களும் அறிய முடிந்தது. ஆனால், பங்குச் சந்தையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களே வியக்கிற ஊழலைத்தான் மோடியும், அமித்ஷாவும் செய்து காட்டியிருக்கிறார்கள். அது, தேர்தல் முடிவுகளால் மாறக்கூடிய பங்குச் சந்தையை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக வெளியிட்டு, மாற்றி, சிறு முதலீட்டாளர்களான மக்கள் பலரின் சேமிப்புகளைப் பறித்து ‘சிலருக்கு’ கொடுக்க முடியும் என்று காட்டியதுதான்.

பங்குச் சந்தையில் நடப்பது என்ன?
இது புரிவதற்கு, முதலில் பங்குச் சந்தை பற்றிய சிலவற்றை அறிவது அவசியமாக இருக்கிறது. சென் செக்ஸ் ஏறியது அல்லது இறங்கியது என்பதுதான் பங்குச் சந்தை பற்றி அறியாதவர்கள் சந்தையைப் பற்றிக் கேள்விப்படுகிற அதிகபட்ச செய்தி. சென்செக்ஸ் ஏறினால், இந்தியப் பொருளாதாரமே வளர்ந்துவிட்டது போல ஆரவாரங்களும் எழுப்பப்படும். உண்மையில் அந்த சென்செக்ஸ் என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பங்குகளின் மதிப்பில் ஏற்படுகிற ஏற்ற இறக்கங்களின் சராசரியைக் கொண்டு, பொதுவாக பங்குச் சந்தை உயர்கிறது அல்லது இறங்குகிறது என்று சொல்கிற ஒரு குறியீடு, அவ்வளவுதான். ஹர்ஷத் மேத்தா ஊழலுக்குப்பின், தேசிய பங்குச் சந்தை உருவாக்கப்பட்டு, 50 பங்குகள் கொண்ட ‘நிஃப்டி 50’ என்ற, அதிகத் துறைகளைப் பிரதிபலிக்கக்கூடிய குறியீடு உருவாக்கப்பட்டது. அந்தப் ‘பாதுகாப்பான’ பங்குச் சந்தை எனக் கூறப்படுகிற தேசியப் பங்குச் சந்தையின் தரவுகளைத்தான், ‘யாருக்கோ’ கொடுத்து, பாதுகாப்பைக் கேலிக்கூத்தாக்கினார் சித்ரா ராம கிருஷ்ணா! அவருக்கு எந்தத் தண்டனையும் தரப்பட வில்லை என்பதிலிருந்து, இந்தப் பாதுகாப்பு என்பது சிறிய அளவிலான நிதியைப் பங்குச் சந்தையில் போட்டு அதில் லாபம் பார்க்க முயலும் எளிய மக்களிடமிருந்து, பெரிய முதலைகளைப் பாதுகாப்பதுதான் – அதாவது, பெரிய முதலலைகள் அனைத்தையும் விழுங்க அனு மதிப்பதுதான் என்பது புரியும்.

பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் நிறுவனத்தின் வளர்ச்சியோடு அந்த பங்குகளின் மதிப்பும் வளரும். ஆனால், பங்கை விற்றால்தான் அந்த வளர்ச்சியினால் உருவான லாபம் நமக்குக் கிடைக்கும். அதனால், பங்கு விலை குறையும்போது வாங்கி, உயரும்போது விற்பது தான், அங்கு லாபம் சம்பாதிக்க முயற்சிப்பவர்களின் அணுகுமுறை. அத்தோடு, பங்கு விலை குறையாவிட்டாலும், உயரும் என்று எதிர்பார்த்தால், அந்தப் பங்குகளை வாங்கி, விலை உயர்ந்ததும் விற்பதும் அப்படியான அணுகுமுறைதான். சென்செக்ஸ் அல்லது ‘நிஃப்டி 50’ இன் உயர்வு என்பது, நிறையப் பங்குகளின் விலை உயர்வதைக் குறிக்கும். இவை தவிர, இந்தப் பங்குகளின் விலை திடீரென்று சரிவது உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்று உருவாக்கப்பட்ட ‘டெரிவேட்டிவ்’ என்றழைக்கப்படும் தொகுப்புகளிலும் ஏராளமான தொகை புரள்கிறது.

ஹர்சத் மேத்தா ஊழல்
நடந்தது எப்படி?
இப்படியான நிலையில், குறிப்பிட்ட பங்குகள் விலை உயரும் என்று ‘நம்பகமான’ புரளியைக் கிளப்பினால் அதை நம்பி அனைவரும் வாங்கத் தொடங்கியதும் அந்த விலை உண்மையிலேயே உயரும். அப்படி உயர்ந்ததும், ஏற்கெனவே (புரளியைக் கிளப்புவதற்குமுன்) குறைவான விலையில் வாங்கி வைத்திருந்த பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதுதான் ஹர்ஷத் மேத்தா செய்தது! அப்படி அதிக எண்ணிக்கையிலான பங்குகள் விற்பனைக்கு வந்ததும் விலை குறையத் தொடங்கும். குறைகிறது என்று அனைவரும் விற்க முயற்சிக்கும்போது, விலை அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும். புரளியை நம்பி, அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்திப்பார்கள். அதைத்தான் இன்று மோடியும், அமித்ஷாவும் செய்திருப்பதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் குற்றம்சாட்டியிருக்கிறார். ஒரே வேறுபாடு, ஹர்ஷத் மேத்தா, அவரே பங்குகளை வாங்கி, விற்றார். மோடி – அமித்ஷா கூட்டம், ‘வேறு யாரோ’ லாபம் பார்க்க உதவியிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஆட்சி மாற்றத்தின் தாக்கம்
பொதுவாக அரசில் மாற்றம் ஏற்பட்டால் கொள்கைகள் மாறும், அதனால் நிறுவனங்களின் வளர்ச்சியில் தேக்கமோ, பின்னடைவோ ஏற்படலாம் என்றெல்லாம் கருதி, பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்திக்கும். புதிய அரசு முந்தைய அரசைவிட முதலாளிகளுக்கு அதிக ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் பங்குச் சந்தை உயரும். ஆனால், அதே அரசு தொடரும் போது, வீழ்ச்சி மட்டுமல்ல, பெரிய உயர்வும் இருக்காது. ஏனென்றால், பெரிய மாற்றம் எதுவும் இருக்கப் போவதில்லை. உதாரணமாக, 2019 தேர்தல் முடிவு களின்போது சந்தை பெரிய மாற்றங்களைச் சந்திக்கவில்லை.

அப்படியான நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படாது என்றால், பங்குச் சந்தையும் பெரிய ஏற்றத்தையோ, இறக்கத்தையோ சந்திக்காது என்பதுதான் இயல்பான நிலை. ஆனால், பிரதமர் மோடி தேர்தல் முடிவுகள் வெளியாகிற நாளில், அதாவது ஜுன் 4 அன்று பங்குச் சந்தை மிகப்பெரிய உயர்வைச் சந்திக்கும் என்றும், அதனால் பங்குகளில் முதலீடு செய்யுங்கள் என்றும் மே 19 தொடங்கி, மே 28 வரை பல முறை பேசினார். இவர் ஏன் இப்படிப் பேசினார் என்பது தான் கேள்வி. இவரது செயல் தான் ஊழல் என்று சொல்ல வைக்கிறது.
ஒரு பிரதமருக்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை எங்குமே எழவில்லை. பொருளாதாரம் நன்றாக இருக்கும் என்று கூறிய பிரதமர்கள் உண்டே தவிர, உயரப் போகும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபமீட்டுங்கள் என்று கூறிய பிரதமர் இந்திய வரலாற்றி லேயே இல்லை. பிரதமரின் சொற்களைப் பெரிதாக மதிக்கிற எளிய மக்கள்தான், இந்த வேண்டுகோளுக்குச் செவிமெடுப்பார்களே தவிர, தனியான ஆய்வு முறைகளைக் கைக்கொள்கிறவர்களான பெரிய முதலீட்டாளர்கள் அல்ல. அப்படியான சிறு முதலீட்டாளர்களான 5 கோடி இந்திய மக்கள், பெரும் இழப்பைச் சந்திக்க பிரதமர் மோடி காரணமாக இருந்திருக்கிறார் என்பதுதான் ராகுலின் குற்றச்சாட்டு.

கருத்துக்கணிப்புகள் என்ற
பெயரில் மோசடி
இந்தப் பின்னணியில்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உண்மையான முடிவுகளுக்குச் சற்றும் பொருத்தமின்றி வெளியான அந்தக் கணிப்புகள், அடுத்து சந்தை செயல்பட்ட நாளான ஜூன் 3 அன்று சந்தையை மிகப்பெரிய அளவில் உயரச் செய்தன. பொதுவாக, ஆய்வு வசதிகள் எதுவுமில்லாதவர்களான சிறு முதலீட்டாளர்கள் – அதாவது சாதாரண மக்கள் – சந்தை உயர்ந்தால் தாங்களும் முதலீடு செய்வதும், சரிந்தால் தப்பிப்பதற்காக வெளியேறுவதையும்தான் செய்வார்கள் என்பதால், அன்றைய உயர்வும் சாதாரண மக்களின் பணத்தை ஈர்க்கவே பயன்பட்டது. ஜூன் 4 அன்று ‘நரியும் வெளியில் வந்தது, மழையில் கொஞ்சம் நனைந்தது, நீலச் சாயம் கரைந்தது’ என்பது போல், உண்மையான முடிவுகள் வெளிவந்ததும், இந்திய வரலாறு இதுவரை காணாத அளவு சரிவை பங்குச் சந்தைகள் கண்டன. இதில், இழந்த தொகையாகக் கணக்கிடப்படும் சுமார் ரூ.31 லட்சம் கோடியும் எளிய மக்கள் இழந்ததுதான். அதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணை நடத்த வேண்டும்
இந்தப் பொய்யான கருத்துக் கணிப்புகளை வெளி யிட்ட ‘இந்தியா டுடே’ – ஆக்சிஸ் மை இந்தியா நிறு வனத்தின்மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சகெட் கோகலே பங்குச்சந்தையை நிர்வகிக்கிற செபிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த ‘ஆக்சிஸ் மை இந்தியா’ நிறுவனத்தின் தலைவர்தான், தங்கள் கருத்துக் கணிப்பு தவறானதற்காக தொலைக் காட்சியிலேயே அழுதவர் என்பது மட்டுமல்ல, பாஜகவும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்பதும் கவனிக்கத்தக்கவை. பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு பரிந்துரைக்கிற நேர்காணல்களை மோடி, அமித்ஷா இருவருமே ஒரே ஊடகத்தில் தான் அளித்தார்கள் என்பதுடன், அது ஏற்கெனவே முறைகேடுகளுக்காக செபி யின் விசாரணை வளையத்தில் இருக்கிறது என்பதையும் ராகுல் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த அத்தனையையும் ‘கூட்டிக் கழித்துப் பார்த்தால்’, ஆட்சியை விட்டுப் போய்விடுவோம் என்று முடிவே செய்து, போகும்போதுகூட இந்திய மக்களின் எஞ்சியிருக்கிற சேமிப்பையும் பிழிந்து எடுத்துவிடுகிற ஊழலைத்தான் மோடியும் அமித்ஷாவும் செய்திருக்கிறார்கள் என்பதே வெளிப்படுகிறது. ‘செய்ததெல்லாம் ஊழல், ஊழலைத் தவிர வேறில்லை’ என்பதாகவே பாஜகவின் ஆட்சி இருந்திருக்கிறது. இனியாவது அவ்வாறு நடக்காமலிருக்கவும், நடந்தவற்றை விசாரித்து நீதி கிடைக்கவும் மக்கள் அளித்திருக்கின்ற தீர்ப்பு பயன்படுமா?

No comments:

Post a Comment