‘நீட்’டை ஒழிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்! 18ஆம் தேதி மாலை சென்னையில் கூடுவீர்! கூடுவீர்!! - கருஞ்சட்டை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

‘நீட்’டை ஒழிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்! 18ஆம் தேதி மாலை சென்னையில் கூடுவீர்! கூடுவீர்!! - கருஞ்சட்டை

அருமைப் பார்ப்பனர் அல்லாத தோழர்களே! பட்டியலின சகோதரர்களே, பிற்படுத்தப்பட்ட உடன் பிறப்புகளே! சிறுபான்மையினரே!
ஒரு காலகட்டம் இருந்தது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் நம்மை மண்டியிடச் செய்தது! கல்வி தானே விழி – அதை அழித்துவிட்டால் நாம் முடங்க வேண்டியதுதானே!
ஏதோ வெள்ளைக்காரன் கல்வி வாசலைத் திறந்து விட்டான். பார்ப்பனர்களுக்கு அது தான் கோபம்! மற்றபடி சுதந்திரப் போராட்ட மும் அல்ல – மண்ணாங்கட்டியும் அல்ல.

இதனை மகாராட்டிரத்தில் தோன்றிய ஜோதி பாபுலேயும் கூறி இருக்கிறார்.
இந்தியத் துணைக் கண்டத்திலே தெற்கில் குறிப்பாக தமிழ்நாட்டில் உதித்த நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் – தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகளால் கல்விக் கண் திறக்கப்பட்டது.

காமராசர் காங்கிரசுகாரர். ஆனாலும், அவரைக் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று சாடியது பார்ப்பனர் கூட்டம். இவற்றுக்கெல்லாம் அடிப்படை மூலகர்த்தா தந்தை பெரியார்!

1952இல் ஆட்சிக்கு வந்தபோதுகூட ஆச்சாரியார் (ராஜாஜி) அரை நேரம் படித்தால் போதும் – அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வரவில்லையா? அத்தோடு விடவும் இல்லை; 6,000 பள்ளிகளை இழுத்து மூடவில்லையா?
தந்தை பெரியார் தலைமையில் தமிழ்ப் பூமியே பூகம்பமாய்க் கிளம்பி, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு, குல்லூகபட்டராம் ஆச்சாரியாரையே பதவியை விட்டு விரட்ட வில்லையா? அத்தோடு அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகவில்லையா?
போராடிப் போராடி ஒவ்வொரு அங்குலமாகக் கல்வியில் முன்னேறி வந்தோம். இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு – கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ்நாட்டில்.

கல்வியிலும் உத்தியோகங்களிலும் பார்ப்பனர் அல்லாதார் தலை தூக்க ஆரம்பித்து விட்டனரே – பொறுக்குமா ஆரியக் கூட்டத்துக்கு?
நேரிடையாக ஒழிக்க முடியாது – மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்ற நிலையில் நம் கல்விப் பாதையில் கண்ணி வெடிகளைப் புதைத்து விட்டார்கள்.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, நஞ்சு கலந்த முள் வேலியை வைத்தவர்கள் ஆயிற்றே! இப்பொழுது அவர்களுக்குக் கிடைத்திருப்பது அரசியல் அதிகாரம். அவர்களுடைய கவனமெல்லாம் சமூக நீதிக்கு எப்படி சவக்குழி வெட்டுவது என்பதுதான்.
அதுததான் ‘நீட்’. அதுதான் EWS.

+2 வரை படித்து, மதிப்பெண் பெற்று டாக்டர் ஆனவர்கள் எல்லாம் டாக்டர் இல்லையாம்! அதற்கு மேலும் ஒரு ‘தகுதி’ தேர்வாம். அதுதான் ‘நீட்’. அது வேறு எதற்கும் அல்ல- நம்மை நீட்டாக ஒழிப்பதற்கே!

ஒரு தகவலைத் தெரிவித்தால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
2016-2017 நீட் வருவதற்கு முன் +2 மதிப்பெண் அடிப்படையில் மரு்ததுவக் கல்லூரியில் திறந்த போட்டியில் 884 இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் 259, தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 23, பழங்குடியினருக்கு ஒரு இடம், அருந்ததியருக்கு 2 இடங்கள், முஸ்லிம்களுக்கு 32 இடங்கள், உயர்ஜாதி யினருக்குக் கிடைத்தவை 68 இடங்கள்.
(200க்கு 200 இடங்கள் 8இல் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏழு இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஓர் இடமும் கிடைத்தன. உயர்ஜாதியினருக்குப் பூஜ்ஜியம்.)

நீட் வந்த பின் – எல்லாம் பழங்கதையாய் பட்டுப் போயின. சி.பி.எஸ்.இ. முறையில் ‘நீட்’ வந்ததால் 20 மடங்கு அதிக இடங்களைக் கைப்பற்றினர். இதுதான் நிலைமை! இதனை நீடிக்க விடலாமா? நீடிக்க விட்டால் நிலைமை என்னவாகும்?
அனிதாக்கள் சாக வேண்டியதுதான்! மீண்டும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மாக்கள்தான் டாக்டர்கள்!
வெளிநாடு சென்று படிக்கலாம் என்றிருந்தது. இப்பொழுது அதற்கும் ‘ஆப்பு’ வைக்கிறார்கள். அதற்கும் ‘நீட்’ போன்ற ஒரு தேர்வாம்!
97 விழுக்காடு மக்களின் வாழ்வோடு மூன்று விழுக்காட்டினர் மோதுகிறார்கள் என்றால், என்ன பொருள்? இன்னும் நாம் சோம்பல் முறித்துக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள்! குறட்டை விடுகிறோம் என்ற நிலைமை!

போதும் போதாதற்கு ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற நவீன குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கிறது ஒன்றிய மோடி தலைமையிலான அரசு.
கோட்டை விடப் போகிறோமா? இல்லை, ஏற்கெனவே நாம் பெற்று வந்த உரிமைகளை மீட்கப் போகிறோமா?
இந்தியத் துணைக் கண்டத்திற்கே சமூக நீதிக்கு வழிகாட்டும் மாநிலம் தந்தை பெரியார் பிறந்த திராவிட தமிழ் மண் அல்லவா!
சமூக நீதிப் போரில் பல விலைகளைக் கொடுத்துக் கொடுத்து இறுதி வெற்றிச் சிரிப்பை ஈட்டியவர்கள் நாம்!
இந்த முறையும் வெல்லுவோம்! நீட்டை எதிர்த்து இப்பொழுது இந்தியா முழுவதும் போராட்டத் தீ கொழுந்து விட ஆரம்பித்துவிட்டது தந்தை பெரியார் உருவத்தைப் பதாகையாக தூக்கிப் பிடித்து போர் முழக்கம் செய்து வருகின்றன!

தமிழ்நாட்டிலும் பல்வேறு அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
வரும் 18அம் தேதி செவ்வாய் மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிட மாணவ்ர் கழகத்தின் – கருஞ்சிறுத்தைகளின் சார்பில் போராட்டம்! போராட்டம்! ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

அனைத்துக் கட்சி தலைவர்களும் அணி வகுக்கின்றனர் – பி.ஜே.பி.யைத் தவிர – அதுதான் பார்ப்பனியத்தின் ‘பக்கா’ வடிவ மாயிற்றே!
தமிழர் தலைவர் போர் முழக்கம் செய்ய இருக்கிறார்.
அணி வகுத்து வாரீர் தோழர்களே! நாம் 97 பேர் – அவர்களோ மூன்று பேர்!
வெல்லப் போவது நாம்தான் – வெள்ளமெனத் திரண்டு வாரீர் தோழர்களே, குறிப்பாக மாணவர்களே, இளைஞர்களே, பெற்றோர்களே!
இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்?

சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு போர்க்களத்தில் குதிப்போம் – வாரீர்! வாரீர்!!

குறிப்பு: 5ஆம் பக்கம் நிகழ்ச்சி நிரல் காண்க.

No comments:

Post a Comment