ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட சிபிஎம் அலுவலகம்-குற்றவாளிகள் 13 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட சிபிஎம் அலுவலகம்-குற்றவாளிகள் 13 பேர் கைது

திருநெல்வேலி,ஜூன் 16- திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து, காதல் இணையருக்கு அடைக்கலம் அளித்ததால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை ஆயுதப்படை சாலை அருகே உள்ள நம்பிக்கை நகரை சேர்ந்த மதன் (வயது 28) என்பவரும் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த முருகவேல் மகள் உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குமுன் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கட்சி அலுவலகத்திலேயே அடைக்கலம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே, மகளை காணவில்லை என பெருமாள்புரம் காவல்நிலையத்தில் முருகவேல் புகார் அளித்தார். காவலர்கள் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் நேற்று முன்தினம் (14.6.2024) மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் சென்ற பெண்ணின் உறவினர்கள்

30-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை தாக்கியுள்ளனர். இதில் அங்கிருந்த வழக்குரைஞர் பழனி, கட்சி நிர்வாகி அருள்ராஜ் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வால் கட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், இந்த வழக்கில் பெண்ணின் தந்தை முருகவேல் (55), பெண்ணின் அண்ணன் சரவணக்குமார் (27), தாய் மாமாவான புதுப்பேட்டையை சேர்ந்த சங்கர் (35), உறவினர்கள் குரு கணேஷ் (27), மதுரை யோகீஸ்வரன் (23), பெண்ணின் தாய் சரஸ்வதி (49), மார்த்தாண்டத்தை சேர்ந்த சித்தி சுமதி (44), பாட்டி ராஜிலா (75), பெரியம்மா புதுப்பேட்டையை சேர்ந்த அருணாதேவி (51), மதுரை பெரியம்மா வேணி (52), சகோதரிகள் ஸ்டெல்லா (29), சூர்யா (32) மற்றும் பந்தல்ராஜா ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

மீது அத்துமீறி கும்பலாக நுழைவது, மிரட்டல், சூறையாடுவது, பெண்களை தவறான வார்த்தையில் பேசியது உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பெண்ணின் பாட்டி ராஜிலா வயது மூப்பின் காரணமாகவும், பெண்ணின் அக்கா சூர்யா கைக்குழந்தையுடன் இருப்பதன் காரணமாகவும் 2 பேருக்கும் பிணை வழங்கப்பட்டது. மற்ற 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment