பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் - தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தைப் போன்று மேற்குவங்கத்தில் போலி பாலியல் வழக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் - தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தைப் போன்று மேற்குவங்கத்தில் போலி பாலியல் வழக்கு!

featured image

பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பினர் அதிகாரத்தைப் பிடிக்க எந்த வித அசிங்கத்திலும் இறங்குவார்கள் என்பதற்கு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியான போலி கச்சத்தீவு ஆர்.டி.அய். தகவலைக் கூறலாம். அதாவது கலைஞரும் காங்கிரசும் சேர்ந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததாக போலி ஆர்.டி.அய். தகவலை தமிழ்நாடு பாஜக தலைவர் வெளியிட அதனை மோடி கூட மேடைக்கு மேடை பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதாவது தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்த இவர்கள் செய்த மோசமான திட்டம்.

அதே போன்று தற்போது மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று பெண்களிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி, அதில் பாலியல் வன்கொடுமை புகார் போன்று எழுதி கொடுத்துள்ளனர். இது தொடர்பான பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் போது மோடியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்கிறோம். நீங்கள் கையெழுத்து மட்டும் போடுங்கள், நாங்கள் எழுதிக்கொள்கிறோம் என்று கூறித்தான் எங்களிடம் வெற்று காகிதத்தில் கையெப்பம் வாங்கினார்கள். ஆனால் தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு புகாரை நான் செய்ததாக விசாரணைக்கு வந்த காவல்துறையினர் கூறுகின்றனர். நான் அப்படி ஒரு புகாரைக் கொடுக்கவே இல்லை என்றார்.

இதனை அடுத்து திரிணாமுல் கட்சியி னருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த பெண் புகாரை திரும்பப் பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாது புகார் கொடுக்க பா.ஜ.க.வினர்தான் வற்புறுத்தியாகவும் கூறியுள்ளார். இது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.மேற்கு வங்க மாநி லத்தில் சந்தேஷ்காலி எனும் பகுதியை, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பிரமுகர் ஷாஜகான் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பா.ஜ.க. மகளிர் அமைப்பு போராட் டத்திலும் இறங்கினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண் களை சந்தித்த தேசிய மகளிர் ஆணை யத்தின் நிர்வாகிகள், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத் திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது 3 பெண்கள் பாலியல் புகாரை அளித்திருந்தனர். தற்போது தங்களது புகாரை திரும்பப் பெற்றிருக்கின்றனர். இது குறித்து கூறிய அவர்கள், “ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் மூலம் நிதி பெற்று தருவதாக பாஜகவினர் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர் எங்களை மிரட்டி திரிணாமுல் நிர்வாகிகளுக்கு எதிராக புகாரை அளிக்க தூண்டினர். எனவேதான் புகார் அளித்தோம்.

மற்றபடி பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடக்கவில்லை. எனவே, புகாரை திரும்பப் பெற்றிருக்கிறோம். புகாரை திரும்ப பெற்ற தால் பா.ஜ.க.வினரிடமிருந்து அச்சுறுத்தல் வந்திருக்கிறது. இதிலிருந்து உரிய பாது காப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.
முன்னதாக சந்தேஷ்காலி விவகாரம் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளியில் உள்ளூர் பாஜக பிர முகர், திரிணாமுல் நிர்வாகிகள் மீதான குற்றச் சாட்டு ஜோடிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது புகார் கொடுத்த பெண்களே புகாரை வாபஸ் பெற்றிருப்பது பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க.விற்கு திரிணா முல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையை உரக்க பேசிய தற்காக அவர்களை பாஜக மிரட்டுகிறது. தங்கள் அரசியல் பேராசைக்காக நம் தாய், சகோதரிகளின் மானத்தை வெட்கமின்றி மிதித்து, வஞ்சக வலைகளை பின்னும் இந்தக் கட்சி இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?” என திரிணாமுல் எம்.பி. சுஷ்மிதா தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லி மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள் மீது போலி ஊழல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கருநாடக அமைச்சர்கள் மற்றும் கேரள முதலமைச்சரின் மகள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரத்தைக்கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது மம்தாவின் மீதான மதிப்பை குலைக்கும் வகையில் போலியான பாலியல்வன்கொடுமை வழக்கை தொடுத்து மிகவும் அசிங்கமான அரசியலை பாஜக செய்துவருகிறது, இருப்பினும் பாஜகவினரின் இந்த மோசடி வித்தைகள் அனைத்தும் உடனடியாக வெளிவந்து உண்மைகளை உலகிற்கு காட்டி பாஜகாவை பொதுமக்களிடையே தொடர்ந்து அம்மணமாக்கிக்கொண்டே வருகிறது.

No comments:

Post a Comment