பட்டாசுத் தொழிற்சாலை விபத்து அதிர்ச்சிக்குரியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

பட்டாசுத் தொழிற்சாலை விபத்து அதிர்ச்சிக்குரியது!

ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
விபத்தில்லாப்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை!
பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்றும், பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தும் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் அருகில் செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து நடந்து 10 பேர் மரணமடைந்துள்ளனர்; 13 பேர் காயமடைந்தனர் என்ற அதிர்ச்சித் தகவல் நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
இது முதல் முறையல்ல; பட்டாசு தொழிற் சாலையில் விபத்து ஏற்படுவதும், மனித உயிர்கள் கொடூரமாக மரணிப்பதும் தொடர் கதையாகவே இருக்கிறது.
அறிவியல் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில், இத்தகு விபத்துகள் நேரா வண்ணம் தடுக்க உரிய வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும். அதிகாரிகள் பட்டாசு தொழிற்சாலைகளைப் பார் வையிட்டு, உரிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா என்று ஆய்வு செய்யவேண்டும்.
சரியான பாதுகாப்பு இல்லாத பட்டாசு ஆலை களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். விபத்தால் மரணமடைந்தவர்களுக்கு இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  காயம் பட்டவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய வகையில் நிதி உதவி உள்பட எல்லா உதவிகளையும் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
10-5-2024

No comments:

Post a Comment