அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2.58 லட்சம் விண்ணப்பங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2.58 லட்சம் விண்ணப்பங்கள்

சென்னை, மே 25– தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரி களில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-2025ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணைய வழி விண்ணப்பப் பதிவு, கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப் பித்தார்கள். வழக்கம்போல், நடப்பாண்டும் பி.காம்., பி.எஸ்சி. கணினி அறிவியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காண்பித்தார்கள்.

2.58 லட்சம் விண்ணப்பம்   அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப் பட்டது. ஆனால், மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப் பதற்கான கால அவகாசத்தை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் (24.5.2024) நிறைவு பெற்றது. கடந்த 19 நாட்கள் நடைபெற்ற விண்ணப்ப பதிவில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு வருகிற 27ஆம் தேதி அனுப்பிவைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் தொடங்குகின்றன. முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாண வர்கள், விளையாட்டு வீரர்கள், மேனாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை மாதம் 3ஆம் தேதி தொடங்கு கின்றன.

No comments:

Post a Comment