கண்ணிருந்தால் பார் 'துக்ளக்'கே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 5, 2024

கண்ணிருந்தால் பார் 'துக்ளக்'கே!

ஆரியர் – திராவிடர் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் – ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயம்

“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது”.
இது ரோமேஷ் சந்திரடட் C.I.E.I.C.S எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்தகத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன.”
இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம். ஏ., யின் “பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்” என்னும் புத்தகத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்”.
இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய “திராவிடரும் ஆரியரும்” என்னும் புத்தகத்தின் 24-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை – ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும். ”
இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரீகம்” என்ற புத்தகத்தின் 139-141-ஆவது பக்கங்களில் இருக்கிறது.
“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத் தின் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள்”.
இது“சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழி வுகளும் கட்டுரைகளும்” என்ற புத்தகத்தில் `ராமாயணம்’ என்னும் தலைப்பில் 587-589-ஆவது பக்கங்களில் இருக்கின்றது.

“ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்”.
தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.
இது 1922-ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் “பழைய இந்தியாவின் சரித்திரம்” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்
“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்) கள் என்றும், தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக் கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்துகொண் டிருந்த அடிப்படையான பகைமையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்”.
இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய “இந்து நாகரீகம்”என்னும் புத்தகத்தில் 69-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“ராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரீகத்திற்கும் ஆரியரல்லாத நாகரீகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன்-ராவணன் ஆகியவர் களால்) நடத்தப்பட்ட போராகும்”.

இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எழுதிய “இந்து நாகரீகம்” என்னும் புத்தகத்தில் 141-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார் களால் பேசும் பாஷை”.
இது சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டி-யில் இருக்கிறது.
“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லா தாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரீகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தன”.
இது பண்டர்காரின் கட்டுரைகள், வால்யூம் 3, பக்கம் 10-இல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்”.
இது டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள் எழுதிய “தென் இந்தியாவும் இந்திய கலையும்” என்ற புத்தகத்தின் 3-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப்போலவே நாகரீகமடைந்தவர்களாய் இருந்தார்கள்”.
இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் 10-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத் தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரீகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”. இது ஷோஷி சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

அசுரர்கள் யார்?
“ஆரிய கடவுள்களாகிய இந்திரனையும், இதர கடவுள் களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றிய வர்களும் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத் தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது”.
இது ஏ.ஸி. தாஸ் எம்.ஏ., பி.எல்., எழுதிய “ரிக் வேத காலத்து இந்தியா” என்னும் புத்தகத்தில் 151-ஆவது பக்கத் தில் இருக்கிறது.
“ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்”.
“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறு வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்”.
இது சி.எஸ். சீனிவாச்சாரி எம்.ஏ., & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்களில் இருக்கிறது.
“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன் னேற்றமான திராவிடர்களைக்கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக்கொண்டார்கள்”.
இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய “உலகத்தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்”.
இது “New Age Encyclopedia”(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா Vol. II. (1925) பக்கம் – 273இல் இருக்கிறது.

ராமாயணம் எதைக் காட்டுகிறது?
“ராமாயணம், தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்”.
இது முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திர பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதிவைத்துக்கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றெ கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவைகளாகும்”.
இது “பார்ப்பன துவேஷி” ராமசாமியால் எழுதப்பட்ட தல்ல, பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865-இல் எழுதின “விரிவான இந்திய சரித்திரம் முதற் பாகம்” என்னும் புத்தகத்தில் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக்கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது”.
இது கி.பி. ஹாவெல் 1918-இல் எழுதிய “இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 32-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக் களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும்”.
இது ஜி.எச்.ராபின்சன் சி.அய்.ஈ.யால் எழுதின “இந்தியா” என்னும் புத்தகத்தின் 155-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

வட இந்திய – திராவிடக் கலை
“வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரீகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை”.
இது தமிழ்ப் பேராசிரியர் கே. என். சிவராஜ பிள்ளை பி.ஏ., எழுதிய “பண்டைத் தமிழர்களின் வரலாறு” என்னும் புத்தகத்தின் 4-ஆம் பக்கத்தில் இருக்கிறது.
“பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்”.

இது நாகேந்திரநாத்கோஷ் பி.ஏ., பி.எல்., எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்” என்ற புத்தகத்தின் 194-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது”.
இது ஹென்றி ஸ்மித் வில்லியம் எல்.எல்.டி., எழுதிய “சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்” வால்யூம் 2-இல் பக்கம் 521-இல் இருக்கிறது.
“இந்தியாவின் தென்பாகத்திலுள்ள நாடுகளைப் போல `பிராமணர்கள்’ வெற்றியோடு வரும்போது ஆந்திரர், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய நாடுகள் மிக்க நாகரீகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்”.
இது வின்சென்ட் ஏ.ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய “இந்திய சரித்திரம்” 14-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்”.
இது இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர் 1909-ஆம் வருஷத்திய பதிப்பு வால்யூம் 1-இல் 405-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியரல்லாதார் பட்டபாடு
“ஆரியரல்லாத இந்நாட்டு பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும் ஆரிய புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள்”.
இந்த வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் ஆரியம் – திராவிடம் என்று ஞாபக மறதியாக எழுதி விட்டார்கள் என்று சொல்லப் போகிறதா துக்ளக் குருமூர்ததி கூட்டம்?

No comments:

Post a Comment