தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நடந்திட காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நடந்திட காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக.5-  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 

இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதி கள், தென்மேற்கு பருவ மழையின் போது மிகக் குறைவான மழைப் பொழிவைப் பெறுகிறது. குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப் பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கருநாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளது.

மாதாந்திர அட்டவணைப்படி, பிலி குண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளன. கெட்ட வாய்ப்பாக, இந்த உத்த ரவை கருநாடகம் முழுமையாக மதிக்க வில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்க ளையும் கடைப்பிடிக்கவில்லை. 2023-_2024-ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டு லுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கருநாட காவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ளது. என்ற போதிலும், கருநாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு பற்றாக் குறையாக தமிழ்நாட்டிற்குத் தண் ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரி டெல்டாவின் உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023, ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று நிலவரப்படி, 26.6 டி.எம். சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போது மானதாக இருக்கும். குறுவை நெற் பயிர் முதிர்ச்சி யடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

இத்தகைய ஆபத்தான சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய நீர் (ஜல)சக்தித்துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச் சினையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்ட வணையைக் கடைப்பிடிக்க கருநாடக அரசுக்கு உரிய அறிவுரை களை வழங்கிடு மாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தி னோம். இருப்பினும், கருநாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள் ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட் டுமே தண்ணீரைத் திறந்து விட்டது. கருநாடகாவின் முக்கிய நீர்த்தேக் கங்கள் 80 விழுக்காடு அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநி லத்தின் நெல் தேவையைப் பெரு மளவு பூர்த்தி செய்கிறது. ஏற்கெ னவே அரிசித்தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்று மதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ் நாட்டு விவசாயிகளின் வாழ் வாதாரத் தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.

அதோடு, உச்சநீதிமன்றம் நிர் ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்க வும் கருநாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்க வேண் டும். இதனை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டும். இவ்வாறு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment