நியாய விலைக்கடைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

நியாய விலைக்கடைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் தகவல்

 சென்னை, மார்ச் 19- நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள  6,500 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர் கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என்று  கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். 

சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாய விலைக் கடையினை அமைச்சர்  17.3.2023 அன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மக்களுக்கு முக்கிய சேவைகளை அளித்து  வருகின்றது. அரசின் சார்பில் கூட்டுறவு  நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப  அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தரமாகவும், தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள்  செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3,516  நியாய விலைக் கடைகள் சொந்த கட்டடங்களிலும், 24,179 நியாய விலைக் கடைகள் வாடகையின்றி பொது கட்டடங்களி லும், 7,952 நியாயவிலைக் கடைகள் வாடகை  கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான நியாய விலைக் கடை வாடகை கட்டடத்தில் ரூ.12,000 வாடகைக்கு செயல்பட்டு வந்தது.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் முயற்சியாலும், பொதுமக்களின் ஒத்துழைப் பாலும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.2,000 மாத வாடகையில் புதிய நியாயவிலைக் கடை  தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6,500 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்.  -இவ்வாறு அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment