உரிய நேரத்தில் உரிய போராட்டங்களை அறிவிப்பதும் - மாநாடுகளை நடத்துவதும் - எந்நேரமும் போராட்ட நெருப்பை அணையாமல் அடைகாப்பதும் திராவிடர் கழகத்தின், திராவிடர் கழகத் தலைவரின் பணிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

உரிய நேரத்தில் உரிய போராட்டங்களை அறிவிப்பதும் - மாநாடுகளை நடத்துவதும் - எந்நேரமும் போராட்ட நெருப்பை அணையாமல் அடைகாப்பதும் திராவிடர் கழகத்தின், திராவிடர் கழகத் தலைவரின் பணிகள்!

 இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., எழுச்சியுரை

சென்னை, ஜூன் 9  உரிய நேரத்தில், உரிய போராட் டங்களை அறிவிப்பதும், இத்தகைய மாநாடுகளை நடத்துவதும், தமிழர்களிடையே எந்நேரமும் போராட்ட நெருப்பை அணையாமல் அடைகாப்பதும் திராவிடர் கழகத்தின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வரின் பணிகள் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022 அன்று மாலை சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தின் இந்தி எதிர்ப்பு மாநாட்டை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் தின் துணைத் தலைவர் அண்ணன் கலி.பூங்குன்றன் அவர்களே,

கண்டித்து உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக் கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இரா.முத்தரசன் அவர்களே,

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை சுருக்கமாக நம்மிடையே உணர்ச்சிகரமாக எடுத்துவைத்து, உரையாற்றி விடைபெற்று சென்றிருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் புரட்சிப்புயல் வைகோ அவர்களே,

பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

மற்றும் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலை வர்களே, தமிழ்ச் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழர்களிடையே எந்நேரமும் போராட்ட நெருப்பை அணையாமல்...

உரிய நேரத்தில், உரிய போராட்டங்களை அறிவிப் பதும், இத்தகைய மாநாடுகளை நடத்துவதும், தமிழர் களிடையே எந்நேரமும் போராட்ட நெருப்பை அணை யாமல் அடைகாப்பதும் திராவிடர் கழகத்தின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவரின் பணிகள்.

தமிழர் தலைவருக்குப் பாராட்டு - நன்றி!

அந்த வகையிலே, இன்றைக்கு நாம் எல்லோரும் சனாதன சக்திகளின் முகத்திரையைக் கிழிக்கின்ற பணி களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், உரிய நேரத்தில் நீட் எதிர்ப்புக்கான போராட்டம், உரிய நேரத்தில் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கான கருத்தரங்கம் - மாநாடு என்று தொடர்ந்து அயராமல் பணியாற்றிக் கொண்டிருக் கின்ற தமிழர் தலைவர் அவர்களை, விடுதலை சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.

இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்று கருத்துரை வழங்குவதற்கு, கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்பை வழங்கியமைக்காகவும் நன்றியை உரித்தாக்குகிறேன்.

பெரியார் காலத்திலிருந்து தொடர்ந்து இந்தப் போராட்டக் களம் அமைந்து வருகிறது. தொடர்ந்து வருகிறது.

இந்தியை, சமஸ்கிருதத்தைப் பரப்புவது, திணிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்

யார் டில்லியிலே ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் இந்தியை, சமஸ்கிருதத்தைப் பரப்புவது, திணிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

டில்லியிலே ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது - எல்லாம் இங்கே தலைகீழாக மாறப்போகிறது; இன்னும் சொல்லப்போனால், ஈழத் தமிழர்களுக்கும் நலம் பயக்கும் என்று தமிழ்நாட்டிலேயே பாரதீய ஜனதா  கட்சியின் ஆட்சிக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர்கள் உண்டு.

ஆனால், இன்றைக்கு என்ன நிலை?

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் ஓர் அங்குலம்கூட முன்னேற்றம் இல்லை.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பதிலும், முன் எப்போதையும்விட தீவிரம் காட்டவேண்டிய நிலை.

கூடுதலாக சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் தீவிர மானப் போக்கு.

ஆக, ஆட்சி மாற்றம் என்பது, கட்சி மாற்றமாகத்தான் இருக்கிறதே தவிர, மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இயங்கக்கூடிய ஆட்சி மாற்றமாக இல்லை. ஆகவேதான், நம்முடைய போராட்டங்கள்  தொடர்கின்றன.

பெரியார் பற்ற வைத்த நெருப்பைத் தொடர்ந்து அணையாமல் காப்பது நம்முடைய கடமை

அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்தப் போராட்ட வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டியதும், பெரியார் பற்ற வைத்த அந்த நெருப்பைத் தொடர்ந்து அணை யாமல் காப்பதும், நம்முடைய கடமை என்பதை உணர்த்தக் கூடிய வகையில் இந்த மாநாட்டை தமிழர் தலைவர் ஒருங்கிணைத்திருக்கிறார்.

இந்தித் திணிப்பு என்பது ஒரு மொழித்திணிப்பு அல்ல; அது ஒரு கலாச்சார திணிப்பு; அது ஒரு கருத்தியல் திணிப்பு என்பதை, பெரியார் சுட்டிக்காட்டியிருக்கிறார்; அண்ணா அம்பலப்படுத்தி இருக்கிறார்; கலைஞர் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த வரிசையில் தமிழர் தலைவர் அவர்களும் அதைத் தொடர்ந்து மக்களிடத்திலே சுட்டிக்காட்டி வருகிறார்.

ஆகவே, இந்தித் திணிப்பு என்பது ஏதோ ஆட்சி நிர்வாகத்திற்கு வசதியாக, இந்தியா முழுவதும் ஒரே மொழி இருந்தால், தொடர்புகளுக்கு எளிதாக இருக்கும்; உறவாடுவதற்கு எளிதாக இருக்கும்; ஆட்சி நிர்வாகத் திற்கு எளிதாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலே, இந்தியைப் படியுங்கள் என்று பொறுப்புணர்வோடு சொல்லுகிறார்கள் என்று பலர் எண்ணக் கூடும்; அல்லது திரித்துப் பேசக்கூடும்.

ஆனால், உண்மையில் அது அவர்களின் நோக்கம் அல்ல. இந்தியைத் திணிப்பது - இந்தி மொழியின்மூலம் அவர்களின் பண்பாட்டைத் திணிப்பதாகும். அவர்களின் கலச்சாரத்தைத் திணிப்பதாகும். இதைத்தான் அய்யா பெரியார் அவர்களும், அந்த நாளிலிருந்து அய்யா ஆசிரியர் அவர்களும் நமக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைத்து வருகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவேண்டிய ஒன்று!

அதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். நாம் இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் என்றால், ஆரியக் கலாச்சாரத் திணிப்பை எதிர்க்கிறோம் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

நாம் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க்கிறோம் என் றால், பார்ப்பனக் கலாச்சாரத் திணிப்பை எதிர்க்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

இதுதான் அடிப்படையாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று; அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவேண்டிய ஒன்று.

இல்லையென்றால், ஏன் இந்தியைப் படிக்கக்கூடாது? படித்தால் வேலை வாய்ப்புக் கிடைக்கும் அல்லவா? படித்தால், வட இந்திய மாநிலங்களிலும் நாம் வணிகம் செய்ய முடியும்; தொழில் செய்ய முடியும். ஏன் இந்தி யைப் படிக்கக்கூடாது? எல்லா நாட்டிற்கும் ஆட்சி மொழி இருப்பதுபோல, இந்தியாவிற்கு, இந்தி ஆட்சி மொழியாக இருப்பதுதானே சரி என்று நம்மிலும் பலர் வாதிடுவதை நாம் பார்க்கிறோம்.

இந்தி என்று  தனியே ஒரு மொழி இல்லை

அதற்கு என்ன காரணம் என்றால், இந்தப் போராட்டம் என்பது, ஆரியப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான போராட்டம் - பார்ப்பனிய கலாச்சாரத் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பதை இன்னும் நாம் போதிய அளவில் உணர்த்தவேண்டி இருக்கிறது என்பதைத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏன் அவர்கள் இந்தியை மட்டும் திணிக்காமல், சமஸ்கிருதத்தையும் சேர்த்து கையிலெடுக்கிறார்கள். இந்தி பேசக்கூடியவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் சரி; வெவ்வேறு மொழிகளில் அண்ணன் சுப.வீ. அவர்கள் சொன்னதைப்போல, இந்தி என்று  தனியே ஒரு மொழி இல்லை.

14 மொழிகளை ஒன்றாக அவர்கள் இணைத்துக் கொண்டு, அதை இந்தி என்ற பெயரில் அழைக்கிறார்கள். அந்தப் பெயர்கள் எதுவும் நமக்கு வாயில் நுழையாது.

போஜ்புரி என்று சொன்னார், உத்தேல்கண்டி என்று சொன்னார், கட்வாலி என்று சொன்னார், இவையெல்லாம் நாம் புழக்கத்தில் பேசாத, கேட்காத பெயர்கள்.

இந்தப் பெயர்கள் அடங்கிய பிராந்திய மொழி களைத்தான், ஒட்டுமொத்தமாக அவர்கள் இந்தி என்று சொல்கிறார்கள்.

இப்படி வரிசைப்படுத்துகின்ற 14 இல், ஒன்றுகூட இந்தி என்று தனியே ஒரு மொழி இல்லை.

அப்படி ஒரு மொழி கிடையாது.

அனைத்திற்கும் ஒரே எழுத்துரு - 

அதுதான் தேவநாகரி ஸ்கிரிப்ட்

அவர்கள் இதை ஒருங்கிணைத்து வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். இவை அனைத்திற்கும் ஒரே எழுத்துரு - அதுதான் தேவநாகரி ஸ்கிரிப்ட்.

எந்த மொழிக்கும் தனித்தனி எழுத்துரு கிடையாது.

இந்த 14 மொழிகளும், தேவநாகரி ஸ்கிரிப்ட் என்ற எழுத்துருவைப் பயன்படுத்துகின்றன. அவ்வளவுதான் ஒற்றுமை.

ஆக, அந்த இந்தி என்கிற மொழியை, அவர்கள் பிற மொழி பேசுகின்ற மக்களின்மீது திணிப்பதோடு, சமஸ் கிருதத்தையும் ஏன் கையில் எடுக்கிறார்கள்; இதுதான் மிக முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய ஒன்று.

இந்தியாவிலே சமஸ்கிருதத்தை ஓரளவிற்கு அறிந்த வர்கள் அல்லது புரிந்தவர்கள் என்றால், அது பார்ப் பனர்கள் மட்டும்தான். ஆக, சமஸ்கிருதம் வளர்க்கப்பட வேண்டும் என்பது, பார்ப்பனர்களின் நலன்களுக்காகத் தான்.

இந்தியாவில் இருக்கிற புராணங்கள் பெரும்பான்மை யானவை சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. ஆகவே, அந்தப் புராணங்களில் இருக்கின்ற கருத்துகள், பிற மொழி பேசுகின்ற மக்கள் படித்தறிய வேண்டுமானால், சமஸ்கிருதத்தை வலுப்படுத்தியாகவேண்டும், பரப்பி யாகவேண்டும்.

அவர்களின் அடிப்படையான இலக்கு; இறுதியான இலக்கு!

எனவே, அவர்களுடைய நோக்கம், சமஸ்கிருதத்தில் இருக்கின்ற புராணக் கருத்துகளை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். அந்தப் புனைவு களை மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்; அந்த மாயாவாத கருத்துகளை மக்களிடத்திலே எப்போதும் தக்க வைத்திருக்கவேண்டும். இதுதான் அவர்களின் நோக்கம்.

அவர்களின் அடிப்படையான இலக்கு அதுதான்; இறுதியான இலக்கு அதுதான்.

ஆகவே, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புராணங்கள், அப்படியே பிற மக்களிடையே போய்ச் சேரவேண்டும். சமஸ்கிருதமும், இந்தியும் பெரும்பான்மையாகப் பேசக் கூடிய மக்களின்  நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

அவர்களின் கலாச்சாரம், ஒட்டுமொத்த தேசத்தி னுடைய கலாச்சாரமாக மாற்றப்படவேண்டும்.

அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினார்.

சமஸ்கிருதத்திற்காக ஒரு நாட்டை உருவாக்க விரும்புகிறார்கள்

எல்லா மொழிகளுக்கும் ஒரு மாநிலம் இருக்கிறது. முடிந்தால், நீ சமஸ்கிருதத்திற்கு ஒரு மாநிலத்தை உருவாக்கிப் பாரேன் என்று சொன்னார்.

அண்ணன் அவர்களுக்கு ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர்கள் சமஸ்கிருதத்திற்காக ஒரு நாட்டை உருவாக்க விரும்புகிறார்கள், அதுதான் பாரதம்.

ஒட்டுமொத்தமாக பாரதத்தை சமஸ்கிருத நாடாக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அவர்களுக்கென்று தனியே ஒரு மாநிலம் இல்லை.

அந்த மொழியைப் பேசுகின்ற மாநில மக்கள் இத்தனை லட்சம் பேர், இத்தனை ஆயிரம் பேர் இருக் கிறார்கள்; இந்தி மொழி பேசக்கூடிய மக்களின் நிலப்பரப்பு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. அதனால், ஒட்டுமொத்தமாக இமயம் முதல் குமரி வரையில் சமஸ்கிருத தேசமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

ஆக, இந்தியை ஒரு பார்ப்பன லாங்வேஜ் என்ற அடிப்படையில், முதலில் திணிப்பது; பொதுமக்கள் ஓரளவிற்குப் பேசுகிறார்கள்; மத்திய இந்திய பகுதியில் பேசுகிறார்கள்; ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. அதையே நீங்களும் பின்பற்றுங்கள் என்று சொல்லி, இந்தியைத் திணித்து சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது.

கோவில் கருவறை மொழியை, நாடாளுமன்ற கருவறை மொழியாக மாற்றவேண்டும்

அது கோவிலின் கருவறை மொழியாக இருந்த நிலை யிலிருந்து, அதை நாடாளுமன்ற கருவறை வரையில் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும் என்பதுதான்.

கோவில் கருவறை மொழியை, நாடாளுமன்ற கருவறை மொழியாக மாற்றவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

இதை செய்யக்கூடியவர்கள் யார்?

பார்ப்பனர்களின் நலன்களுக்காகப் பாடுபடக் கூடியவர்கள்; பார்ப்பனர்கள் அல்ல - பார்ப்பனர்கள் அல்லாத மோடி, அமித்ஷா போன்றவர்கள்தான்.

இதில்தான் அவர்கள் வித்தை அடங்கியிருக்கிறது; வெற்றியும் அடங்கியிருக்கிறது.

இதைப் புரிந்துகொண்டுதான் தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், அந்தக் கோட்பாட்டையே பார்ப்பனியம் என்று அடையாளப்படுத்தினார்கள்.

பார்ப்பனர்களின் நலன்களை மய்யமாகக் கொண்டதால், அது பார்ப்பனியம்தான்!

அது சனாதனம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், வருணாசிரமம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், மனுதர்மம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், குல தர்மம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், அதை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இது பார்ப்பனர் களின் நலன்களை மய்யமாகக் கொண்டதால், இந்தக் கோட்பாட்டை பார்ப்பனியம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் கோட்பாட்டை பார்ப்பனியம் என்று அடை யாளப்படுத்தியவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும்.

பிராமணீசம், பிராமினோகிரசி - ஏனென்றால், அது முழுக்க முழுக்க அவர்களின் நலன்களைச் சார்ந்தது; அவர்களின் பாதுகாப்பைச் சார்ந்தது.

பார்ப்பன சிறுபான்மையினர் ஆட்சியை நடத்துகின்றார்கள்

பெரும்பான்மை மக்கள் ஆட்சிக்கு வருகிறார்கள்; ஆட்சி நடத்துகிறார்கள் என்று நாம் சொல்கிறோம். உண்மையில், சிறுபான்மை மக்கள்தான் ஆட்சி நடத்து கின்றார்கள்; பார்ப்பன சிறுபான்மையினர் ஆட்சியை நடத்துகின்றார்கள்.

இந்தப் பார்ப்பன சிறுபான்மையினர் தொடர்ந்து ஆட்சி நடத்துகின்றார்கள் என்றால், அது எண்ணிக்கைப் பெரும்பான்மையல்ல. கருத்தியல் பெரும்பான்மை.

கருத்தியல் சார்ந்த பெரும்பான்மை வாதம்

பார்ப்பனர்கள், பார்ப்பனியத்தை கருத்தியல் பெரும் பான்மையாக மாற்றுகிறார்கள். ஒரு அய்டியாலஜிகல் மெஜாரிட்டிடேரிலிசம் - கருத்தியல் சார்ந்த பெரும் பான்மை வாதம்.

நான் பேசுவதை மோடி பேசுகிறார்; நான் பேசுவதை  அமித்ஷா பேசுகிறார்; நான் பேசுவதை அண்ணாமலை யும் பேசுகிறார். நான் பேசுவதை தமிழிசை சவுந்தி ரராசனும் பேசுகிறார்.

இவர்கள் யாரும் பார்ப்பனர்கள் இல்லை. ஆனால், அவர்களும் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்ட.வர்கள். கருத்தியல் பெரும்பான்மை வாதம். 

ஆக, கருத்தியல் பெரும்பான்மை வாதத்தைத்தான் இன்றைக்கு இந்துத்துவா என்ற புதிய பெயரில் அவர்கள் அதைக் கட்டமைக்கிறார்கள்.

இந்துத்துவா என்ற பெயரில் அவர்கள் கட்டமைப்பது, இந்துப் பெரும்பான்மையை கட்டமைப்பதற்கான ஒரு சூழ்ச்சி அது - சூது, சூழ்ச்சி.

பார்ப்பனர்கள் தனிமைப்பட்டு விடக்கூடாது. அவர்கள் இந்துக்களோடு இணைந்து, இந்து என்ற பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பார்ப்பனர்கள் தனிமைப்பட்டுவிடக் கூடாது. அவர்களின் தற்காப்பு முக்கியமானது.

(தொடரும்)


No comments:

Post a Comment