தலை தூக்கும் போலி அறிவியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

தலை தூக்கும் போலி அறிவியல்

 "இந்து தமிழ் திசை" நாளேட்டில் (16.6.2021) “தலை தூக்கும் போலி அறிவியல்என்னும் தலைப்பில் நடுப் பக்கக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. மிகவும் சிறப்பான கட்டுரையே!

கரோனா பெருந்தொற்று ஒருபுறம் மனிதகுலத்தை ஆட்டி வந்தாலும், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. போலி மருத்துவர்களைப் போலவே, உறுதிப்படுத்தப் பட்ட ஆதாரங்களுக்கு எதிராகப் பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில்சமூக வலைதள நிபுணர்கள்சமீபத்திய ஆண்டுகளில் கைதேர்ந்தவர் களாகிவருகிறார்கள். இதைத் தகவல்தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் அடையாளப்படுத்துகிறது.

இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை ஆதரிப்பது போல் சில மதிப்புமிகு அறிவியலாளர்களும், மருத்துவர்களும் சமூக ஊடகங்கள் வழியே கருத்து தெரிவிக்கிறார்கள் அல்லது அவர் களுடைய பேச்சானது திரிபுவாதக் கருத்துகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. தங்களுடைய முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில் மதிப்பைப் பெற்றுள்ள இந்த அறிஞர்கள், அறிவியல் முறைசார்ந்த கருத்துகளிலிருந்து வழுவி, ஆதாரமற்றதும் ஆபத்தானதுமான கருத்துகளை முன்வைக்கிறார்கள். இவை கரோனாவை விடவும் வேகமாகப் பரவிவருகின்றன. ஒரு புதிய நோய்த்தொற்று குறித்த புரிதலானது, துறை சார்ந்தவர்களிடமும் அவர்கள் மூலமாகச் சமூகத்திலும் பரவலாவதற்கு முன்பே, இது போன்ற ஆதாரமற்ற கருத்துகள் காட்டுத்தீபோல் பரவிவிடுகின்றன, நம்பவும் படுகின்றன.

பிறழ்ந்த அறிவியலாளர்கள்:

உலக மருத்துவர்கள் கூட்டணியைச் சேர்ந்த அய்ரிஷ் அறிவியலாளர் டோலரஸ் காஹில், கரோனா நோயைச் சாதாரண பருவகாலக் காய்ச்சல் என்று முரண்பாடான கருத்தை முன்வைத்ததன் காரணமாக, அய்ரோப்பாவின் பல பகுதிகளில் ஊரடங்குக்கு எதிரான போராட்டங்கள் உருவாக, கரோனா நோய் மறுப்பாளர்களும் உருவானார்கள். நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிவியலாளர் லூக் மான்டேனியே கரோனாவின் தோற்றம் தொடர்பாகவும், தடுப்பூசிப் பயன்பாடு தொடர்பாகவும் தொடர்ச்சியாக சதிக் கோட்பாடு

ரீதியிலான கருத்துகளை முன்வைத்துவருகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் தாமஸ் கோவன், 5ஜி ரேடியோ அலைகளே கரோனா பரவலுக்குக் காரணம் என்று கடந்த ஆண்டு கூறினார். அது எந்த வகையிலும் சாத்தியமற்றது என்கிறபோதும், 5ஜி அலைக்கற்றைக்கு எதிரான இந்தப் போக்கின் காரணமாக, பிரிட்டனில் மட்டும் 87 செல்போன் கோபுரங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.”- (தமிழ் இந்து)

படித்தவர்கள் கூட சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாத வகையில் கருத்துகளைப் பரப்புவதை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

இதன் விளைவு எந்த விபரீத எல்லையைத் தொடும் என்றும் சிந்திக்கப்பட வேண்டமா?

இந்தியாவின் பிரதமராக இருக்கக்கூடியவரே, கரோனாவை ஒழிக்கக் கை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று சொல்லுவது எல்லாம் எத்தகைய விபரீதம்?

கரோனா பிரச்சினை என்பது மட்டுமல்ல; பொதுவாகப் படித்தவர்கள், பெரும் பதவி வகிக்கக் கூடியவர்கள் மவுடிகத்தின் மடியில் புரண்டால், அது நாட்டு மக்களின் உயிர்க்கே உலை வைக்கும். பேரபாயம் தானே!

இதனை அவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்? மும்பை - விஞ்ஞானிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி சொன்ன கருத்து - உலக நாடுகள் மத்தியிலே பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தவில்லையா?

விநாயகன் தலையில் யானையின் தலையை ஒட்ட வைத்து சிவபெருமான் அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்த முன்னோடி என்று பிரதமர் பேசவில்லையா?

நோபல் அறிஞர் வெங்கட்ராம கிருஷ்ணன் தலையில் தலையில் அடித்துக் கொள்ளவில்லையா? இனிமேல் இந்தியாவில் நடக்கும் இது போன்ற மாநாடுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று சொல்லவில்லையா?

அவரை சந்திக்க வேண்டும் என்று பிரதமர் விரும்பிய போதும், விஞ்ஞானி வெங்கட்ராம கிருஷ்ணன் சந்திக்க மறுத்து விட்டாரே!

பிரதமருக்கு  - ஒன்றிய அரசுக்கு நெருக்கமானவர் என்கிற ஒரே காரணத்துக்காக ஒரு நாட்டு வைத்தியர் (?) ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை மிகவும் முரட்டுத்தனமாக, சற்றும் அறிவுக்கு இடமின்றி தரக்குறைவாகக் விமர்சிக்க வில்லையா?

அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட போது -இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா நீதிமன்றம்? ‘இதனை ஏன் பெரிசு படுத்துகிறீர்கள்? அவருக்கு விளம்பரத்தைக் கொடுக்கிறீர்களா?’ என்று  சொன்னதெல்லாம் பொருள் பொதிந்தது தானா?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசியல் சாசனம் (51 கி-லீ) கூறியதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய நீதிமன்றம் மக்கள் உயிருக்கு உலை வைப்பவர்கள் என்று குற்றச்சாட்டுபதிவு செய்து சிறைச்சாலைக்குள் தள்ள வேண்டாமா?

பகுத்தறிவு காலத்தில் குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் நாடு  நகருகிறது என்று பொருளாதார பேராசிரியர் அனுப் சின்கா எழுதியது கவனிக்கத்தக்கதே!

பாரத ரத்னா விருது பெற்ற சி.எஸ்.ஆர்.ராவ் சொன்னார் - ‘பிரதமர் மோடிக்கு நல்ல ஆலோசகர்கள் தேவை! என்று;  அதனைத்தான் இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டும்.

அறிவியல் சிந்தனை பற்றி அரிய கட்டுரையினை தீட்டியுள்ள இதே "இந்து தமிழ் திசை" நாளேடு வாரந்தோறும்ஆனந்த ஜோதிஎன்று பெயரால் புராண மூடத்தனங்களை கண் மூடித்தனமாகக் குவிப்பது ஏன், ஏன்? ஏனிந்த இரட்டை வேடம்?

No comments:

Post a Comment