விழிப்புணர்வு பெறுவதற்காக ஷனநாயகத்துக்கு விடப்படும் அறைகூவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

விழிப்புணர்வு பெறுவதற்காக ஷனநாயகத்துக்கு விடப்படும் அறைகூவல்

கபில் சிபல்


சமூகத்தில் குற்றச் செயல்களே நடைபெறாமல் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த சமூக ஒப்பந்தத்தாலும் கூட முடியாது. சமூக ஒழுங்கை பாதிக்கும் குற்றவாளிகளிடையேயும், அதனைப் பாதுகாப்பதற்காகப் பாடுபடுவர்களுக்கும் இடையே  தொடர்ந்து பகை உணர்வு  நிலவி வந்திருக்கிறது என்பதை வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது. ஒரு வடிவிலாவது அல்லது வேறொரு வடிவிலாவது, அதிகாரக் கட்டமைப்பில் இருந்து உருவாகும் குற்றங் களையும், குற்றவாளிகளையும் கையாள்வதற்காகவே சட்டங்கள் உள்ளன. பாதுகாப்பாக தாங்கள் இருப்ப தாக நம்பும் தனிமனிதர்களை தங்களின் அன்றாட வாழ்வை மேற்கொள்வதற்கு அனுமதிக்கும் சமூக ஒழுங்கை நிலை நாட்டும் பொறுப்பு அந்த அதிகாரத் தில் இருப்பவர்களுக்கு உள்ளது. தனிப்பட்ட மனிதர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதையோ,  சமூக அமைதியை கெடுக்கும் குற்றங் களை இழைப்பவர்களுடன் ஒத்துழைப்பது அல்லது அவர்களைப் பாதுகாப்பது போன்ற செயல்களின் மூலம் தனிமனிதர்களின் சுதந்திரங்களை அரசோ அல்லது அரசு நிருவாக இயந்திரங்களோ தியாகம் செய்வதை எந்த ஒரு நவீன சமூகமும் பொறுத்துக் கொள்ளாது.


வர வர, குடிமக்களாகிய நமது ஒட்டு மொத்த மனசாட்சியையும் அதிர்ச்சி அடையச் செய்யும் அளவுக்கான மிருகத்தனம் நிறைந்த குற்றங்கள் நமது ஜனநாயக நாட்டில் அதிக அளவில்  நடைபெறுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அத்த கைய கொடிய குற்றங்களை இழைப்பவர்களிடம் புலன் விசாரணை செய்வதற்கு அரசு நிருவாக இயந் திரம் கடந்த அண்மைக் காலங்களில் கடைப்பிடித்த நடைமுறை அக் குற்றங்களை இழைத்தவர்களைத் துணிவு கொள்ளச் செய்துள்ளது.


வன்முறையின் வண்ணங்கள்


ஜாதி அடிப்படையில் மக்களை இலக்காகக்  கொண்ட குற்றங்களின் அளவு  2014 ஆம் ஆண்டு முதல், அதிகமாக பெருகிவிட்டன. உயர்ஜாதி மக்க ளின் மிருகத்தனமான வன்முறைத் தாக்குதல்களுக்கு அடிக்கடி பாதிக்கப்படுபவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர். நியாயமும் ஒழுக்கமும் அற்ற ஜாதி கட்டமைப்பும், அதனுடன் இணைந்த மன்னிக்கும் மனப்பான்மை அற்ற தன்மையும், தாங்கள் இழைக் கும் அது போன்ற குற்றங்களுக்காக எந்தவித வழக் கிலும் சிக்கிக் கொண்டு எந்த வித தண்டனையும் பெறாமல் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கின்றன. தங்களின் உதவிக்கு அரசு இயந்திரம் முன்வரும் என்ற நம்பிக்கையில் குற்றவாளிகள் இருக்கின்றனர். அதிகாரக் கட்டமைப் பில் ஜாதிகளின் செல்வாக்கு மிக ஆழமாகப் பதிந்து போயிருப்பதே இதன் காரணமாகும். பொதுமக்கள் காணும்படி தாழ்த்தப்பட்ட மக்கள் வெட்டிக் கொல்லப் படுவதும்,  பாலியல் தாக்குதல் உள்ளிட்ட கொடுமை களுக்கு அவர்கள் ஆளானது மற்றும் அக்குற்றங் களை இழைத்தவர்கள் எந்தவித தண்டனைக்கும் உள்ளாகாமல் தப்பிப் போவது பற்றியுமான மறந்து போகப்பட்ட கதைகளும் எவ்வாறு, ஏன் இவை நிகழ்கின்றன என்பதை விளக்குவதாக இந்த நிகழ்ச்சி கள் அமைந்துள்ளன. ஜாதியும் வறுமையும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு அவர்களது வாழ் வில் விளையாடுகிறது.  ஜாதி அமைப்பின் அடி மட்டத்தில் இருக்கும் மக்களும் கூட வறுமையில் மூழ்கித் தவிப்பவர்களாக இருப்பதால், நீதியைப் பெறுவதற்கு இயலாத நிலையில்தான் அவர்களும் இருக்கின்றனர்.


இவை மட்டுமன்றி, மதக் காரணங்களின் அடிப் படையில் இழைக்கப்படும் குற்றங்களும் உள்ளன. பெரும்பான்மை இனத்தவர் கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மை இனத்தவருக்கு அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை.   சிறுபான்மை இனத்தவர் மீது  ஆதிக்கம் செலுத்தி வன்முறைத் தாக்குதல் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று தற்போது நிலவி வரும் பெரும்பான்மையினத்தவரின் கலாச் சாரம் எதிர்பார்ப்பதும் கோருவதுமே அதன் காரணம் ஆகும். அவர்களின் உடல் அமைப்பு மற்றும் அவர் கள் என்ன உடுத்துகிறார்கள் என்பதை இலக்காகக் கொண்டு அவர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் வெளிப் படையாக அவமானப்படுத்தப்பட்டு,  அவர்க ளது முன்னோர்கள் இழைத்ததாக கருதப்படும் பாவங் களுக்குத் தக்க விலையை அவர்கள் கொடுக்கச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு வன்முறைத் தாக்கு தல்களை மேற் கொள்பவர்கள், பெரும்பான்மை இனத்தவரின் தேசிய உணர்வின் பிரதிநிதிகளாக தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர். ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மற்றும் வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் மீது அந்தக் கோட்பாட்டைத் திணிப்பது என்பது மூன்றாவது அம்சமாகும். இந்த இடத்தில் இருந்துதான் வன்முறை அரசியல் பொறுப்பேற்றுக் கொள்கிறது. கருத்து வேறுபாட்டுக் குரலை அடக்கி ஒடுக்குவதில், கருத்து மாறுபட்டவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவ தற்கு வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். தங்களது வன்முறைச் செயல்களுக்கு எதிராக எந்த வித எதிர்ப்பும் ஏற் படாமல்  அடக்கி ஒடுக்கப்படும் என்ற உறுதிப் படுத் தப்பட்ட செய்தி தேசிய நீரோட்டத்தில் மேல்மட்டத் தில் இருந்து கீழ் மட்டம் வரை பரப்பப்படுகிறது. அதனால், கலாச்சார-அரசியல்-மத வண்ணங்கள் கொண்ட வன்முறைகளை இந்திய அரசு எதிர் கொள்ள வேண்டியுள்ளது.


சட்ட நடைமுறையின் நிலைப்பாடு


சட்டத்தின் ஆட்சி நிலை பெறவேண்டுமானால்,  சட்டத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக  தகுதி உள்ள முறையில் சட்ட நடைமுறை தன்னைத் தானே தயாராக்கிக் கொள்ள வேண்டும்.  நியாயமா கவும்,  ஒரு தலை சார்பாக இல்லாமலும் புலன் விசார ணையை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால், ஆதிக்க ஜாதியினரின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டு, சட்ட நடைமுறை தன்னைத் தானே சட்டத்தில் இருந்து விலக்கி வைத்துக் கொண்டு இருப்பதாகவே தோன்று கிறது. அண்மையில் நடந்தேறியுள்ள சோக நிகழ்வு கள் அரசின் இயல்புத் தன்மையைப் பற்றியும், இந்த நிகழ்வுகளில் விசாரணை அமைப்புகளின் பங்களிப் பைப்  பற்றியும் இயல்பாக எழும் சந்தேகத் தீயில் எண்ணெய் வார்ப்பது போலவே உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு சட்ட அமர்வு ஒன்றினால் உண்மை என்று ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குற்றம், சதித் திட்டத்தையும், சதிகாரர்களையும் நீதிமன்றம் அடையாளம் காண முடியாத வகையில், பொது மக்கள் காணும்படி வெளிப்படையாக  எவ்வாறு நிகழ்த்தப்பட்டிருக்க முடியும் ?


பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட 19 வயது தாழ்த்தப்பட்ட பெண்ணின் உடலை அவளது குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தாமல் காலை 2.30 மணி அளவில் மிகவும் ரகசியமாக எரித்த புலன் விசாரணையின் செயலை எவ்வாறு ஒருவரால் விளக்க இயலும்? இறந்து போன பெண்ணின் உடல்நிலை பற்றி அவளது குடும்பத்தினர் கவலை தெரிவித்த பிறகும், தான் கூட்டு பாலியல் வன்முறைக்கு  உள்ளாக்கப் பட்டதாக அந்தப் பெண் மரண வாக்குமூலம் அளித்த பிறகும், அந்தப் பெண் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட வில்லை என்ற முடிவுக்கு விசாரணை அமைப்பு எவ்வாறு வந்தது?


நீதிமன்றங்களின் இயலாமை!


மஹமது ஹக்லக் வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்வும்,  கதுவா பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட  நிகழ்வும், அது போன்ற குற்றங் களைச் சூழ்ந்துள்ள ஆதிக்க ஜாதியினரின் அரசிய லும் ஒன்று சேர்ந்து, உ.பி. மாநில அரசு இயந்திரம் குற்றம் இழைத்தவர்களைத் தண்டிப்பதற்கு மாறாக, அக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிக் கும் அளவுக்கு ஒருதலை சார்பாக நடந்து கொண்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆவணங் களைத் திருத்தி அமைப்பது, முக்கிய சாட்சிகளின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யாமல் விட்டு விடுவது, வழக்குக்கு மிகவும் இன்றியமையாத சாட்சி யங்களைத் திரட்டுவதை வேண்டுமென்றே செய் யாமல் விடுவது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றத்துடன் தொடர்பு படுத்தும் சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது என்ற அனைத்து வகைகளிலும் ஒரு புலன் விசாரணையை மிகவும் அலட்சியமாகவும் மோசமாகவும் மேற்கொள்ளும் ஆற்றல் எந்த ஒரு புலன் விசாரணை அமைப்புக்கும் உள்ளது. இதனால் இந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் எதுவும் செய்ய இயலாமல் போய்விடுவதால், சட்டத்திற்கும் தங்க ளுக்கும் உதவி செய்து கொள்ள இயலாதவைகளாக நீதிமன்றங்கள் ஆகிவிடுகின்றன. அரசு, புலன்விசா ரணை அமைப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட்டு சேர்ந்து வழக்கை பலவீனமாக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வைத்ததுதான் சட்டமாக ஆகிவிடுகிறது.


நம் ஜனநாயக நாடு விழித்துக் கொள்வதற்கான அறைகூவல் இது.  நமது முதுகெலும்பு அற்ற சில அமைப்புகள்  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு  இவ்வாறு வெளிப்படையாக ஆதரவு தருவதுதான் விவகாரங்கள் இந்த அளவுக்கு மிகமிக மோசமாகப் போய்விட்டதற்கான காரணம். அரசின் செயல்பாடு களில் குடி மக்கள் நம்பிக்கை இழக்கச் செய்யும் செயல்பாடுகளை எதிர்த்து நிற்க இயன்ற ஒரே அமைப்பு  நீதிமன்றம்தான். உண்மையை உண்மை என்று கூறும் துணிவு நீதிமன்றங்களுக்கு வருவதைப் பொருத்தே நமது எதிர்காலம் சார்ந்துள்ளது.


நன்றி: ‘தி இந்து', 07.10.2020


தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment